/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலைகள் விசர்ஜன ஊர்வலம்
/
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலைகள் விசர்ஜன ஊர்வலம்
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலைகள் விசர்ஜன ஊர்வலம்
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலைகள் விசர்ஜன ஊர்வலம்
ADDED : செப் 09, 2024 06:37 AM
கோபி: சதுர்த்தியை முன்னிட்டு, கோபியில் விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம் நேற்று கோலாகலமாக நடந்தது.
கோபி அருகே ஊஞ்சப்பாளையம் காலனி, கடத்துார் காலனி, பள்ளிக்கூட வீதி, இந்திரா நகர், பிள்ளையார் கோவில் வீதி உள்ளிட்ட பகுதிகளில் வைத்து, பூஜித்த விநாயகர் சிலைகளின் ஊர்வலம் நேற்று மாலை, 5:30 மணிக்கு நடந்தது. கொடிவேரி அணை பிரிவில் இருந்து, பத்து வாகனங்களில் அணிவகுத்து நின்ற விநாயகர் சிலைகள் ஊர்வலமாக புறப்பட்டு, கொடிவேரி தடுப்பணையில் விசர்ஜனம் செய்யப்பட்டது. இதேபோல் நேற்றிரவு கோபி அருகே ல.கள்ளிப்பட்டி பிரிவில் இருந்து, நான்கு விநாயகர் சிலைகளும், கோபி அரசு போக்குவரத்து கழக கிளை பணிமனை அருகே இருந்து, 17 சிலைகள் ஊர்லமாக புறப்பட்டு, தடப்பள்ளி வாய்க்காலில் விசர்ஜனம் செய்யப்பட்டது.
* மொடக்குறிச்சி கிழக்கு ஒன்றியம் சார்பில், 22 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, நேற்று மாலை மன்னாதம்பாளையம் குலவிளக்கு அம்மன் கோவில் காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டது. இதே போல் மொடக்குறிச்சி வடக்கு ஒன்றியம் சார்பில், 34 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, காவிரி கரையில் கரைக்கப்பட்டது.
* இந்து முன்னணி சார்பில், பெருந்துறை, விஜயமங்கலம் பகுதிகளில், 21 இடங்களிலும், பொதுமக்கள் சார்பில், 11 இடங்களிலும் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதில், பெருந்துறை கோட்டை முனியப்பன் கோவில் அருகில், இந்து முன்னணி சார்பில், 9 அடி உயர விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இங்கு நேற்று மாலை, மற்ற விநாயகர் சிலைகள் அனைத்தும் கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து ஊர்வலமாக போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச் சென்று காவிரி ஆற்றில் விசர்ஜனம் செய்தனர்.
* தாளவாடி சுற்று வட்டார பகுதிகளில் இந்து முன்னணி சார்பில், 21 விநாயகர் சிலைகளை நேற்று மாலை ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியாக, வாகனங்களில் எடுத்து சென்று தலமலை சாலையில் உள்ள ஆற்றில் கரைத்தனர். ஏராளமானோர் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். ஏ.டி.எஸ்.பி., விவேகானந்தன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதே போல் ஆசனுாரில் இந்து முன்னணி சார்பில் இரு சிலைகள்,பொதுமக்கள் சார்பில், 10 சிலைகள் அந்தந்த பகுதிகளிலுள்ள குளம், குட்டைகளில் கரைத்தனர்.
* திருப்பூர் மாவட்டம், தாராபுரம், அமராவதி சிலை அருகே நேற்று மதியம், 2:00 மணியளவில், இந்து மக்கள் கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலத்தை, மாநில இளைஞரணி தலைவர் ஓம்கார் பாலாஜி, பா.ஜ., மாநில செயற்குழு உறுப்பினர் கொங்கு ரமேஷ் ஆகியோர் துவக்கி வைத்தனர். இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் ஈஸ்வரன் தலைமையில், பா.ஜ., மாநில இளைஞரணி செயலாளர் யோகேஷ் முன்னிலையில், விநாயகர் சிலை ஊர்வலம் புறப்பட்டு அகஸ்தீஸ்வரர் கோவிலை அடைந்தது. கொண்டு செல்லப்பட்ட, 14 விநாயகர் சிலைகள், அமராவதி ஆற்றில் கரைக்கப்பட்டது. இதேபோல் தமிழக விஷ்வ ஹிந்து பரிசத் சார்பில் நடந்த ஊர்வலத்தில், 11 சிலைகள் ஆற்றில் கரைக்கப்பட்டது.