ADDED : ஆக 06, 2026 06:12 AM

ஈரோடு:ஈரோடு மாவட்ட அரசு
தலைமை மருத்துவமனை வளாகத்தில் இருந்து, இந்திய குழந்தை மருத்துவ
குழுமம் சார்பில், உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு
பேரணி துவங்கியது.
கலெக்டர் கந்தசாமி கொடியசைத்து, பேரணியை
துவக்கி வைத்து கூறியதாவது: ஆக., 1 முதல், 7 வரை உலக தாய்ப்பால் வார
விழா கொண்டாடப்படுகிறது. குழந்தை பிறந்தது முதல், 6 மாதங்களுக்கு
தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். 6 மாதம் முடிந்ததும், இரண்டு
வயது வரை, தாய்ப்பாலுடன், கூடுதல் இணை உணவு வழங்க வேண்டும். முதன்
முதலில் சுரக்கும் சீம்பாலில் நோய் எதிர்ப்பு சக்தி, கண் பார்வைக்கு
தேவையான சக்தி அதிகம் உள்ளது. பச்சிளம் குழந்தை வளர்ச்சிக்கு தேவையான
அனைத்து ஊட்டச்சத்தும் தாய்ப்பால் மூலம் கிடைக்கும். தாய்ப்பால் எளிதில்
ஜீரணமாகக்கூடியது. புட்டிப்பால் குழந்தைக்கு வயிற்று போக்கு
ஏற்பட வாய்ப்பாகும். தாய்ப் பால் கொடுப்பதால் குள்ளத்தன்மை, உடல்
மெலிவுத்தன்மை, எடை குறைபாடு தடுக்கப்படும். குழந்தை இறப்பு விகிதம்
குறையும். இவ்வாறு கூறினார்.
செவிலியர் கல்லுாரி மாணவியர்,
அங்கன்வாடி பணியாளர்கள் பேரணியில் பங்கேற்றனர். அரசு மருத்துவமனை
கண்காணிப்பாளர் டாக்டர் வெங்கடேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.
கோபியில்...
ஒருங்கிணைந்த
குழந்தைகள் வளர்ச்சி பணிகள் துறையின், கோபி வட்டாரம் சார்பில், உலக
தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு, கோபி அரசு மருத்துவ
மனையில்,
விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. குழந்தை வளர்ச்சி திட்ட
அதிகாரி தீபா தலைமை வகித்தார். கோபி அரசு மருத்துவமனையின் பெண்
டாக்டர்கள் பங்கேற்றனர். கர்ப்பிணிகளின் உணவு பழக்க வழக்கம்,
தாய்ப்பாலின் அவசியம் குறித்து அவர்களிடம் விழிப்புணர்வு
ஏற்படுத்தினர். அங்கன்வாடி பணியாளர்களின் விழிப்புணர்வு நாடகம்
நடந்தது.
