/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
போக்குவரத்துக்கு இடையூறாக நிற்கும் வாகனங்கள் சங்கராபுரம் பஸ் நிலையத்தில் டிரைவர்கள் அவதி
/
போக்குவரத்துக்கு இடையூறாக நிற்கும் வாகனங்கள் சங்கராபுரம் பஸ் நிலையத்தில் டிரைவர்கள் அவதி
போக்குவரத்துக்கு இடையூறாக நிற்கும் வாகனங்கள் சங்கராபுரம் பஸ் நிலையத்தில் டிரைவர்கள் அவதி
போக்குவரத்துக்கு இடையூறாக நிற்கும் வாகனங்கள் சங்கராபுரம் பஸ் நிலையத்தில் டிரைவர்கள் அவதி
ADDED : ஆக 05, 2024 12:31 AM

சங்கராபுரம்: சங்கராபுரம் பஸ் நிலையத்தில் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களால் பஸ் டிரைவர்கள், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
சங்ககராபுரம் நகரின் மைய பகுதியில் பஸ் நிலையம் உள்ளது. சங்கராபுரம் சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சங்கராபுரம் பஸ் நிலையத்தில் இருந்து தினமும் 50 க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பஸ்கள் செல்கின்றன.
சங்கராபுரம் பஸ் நிலையத்திற்குள் அதிக பஸ்கள் நின்று செல்ல போதிய இட வசதி இல்லை. இந்நிலையில், பஸ் நிலையத்தில் உள்ள கடைக்காரர்கள், கடையின் முன் உள்ள நடைபாதையையும் ஆக்கிரமித்துள்ளனர்.
அதுமட்டுமின்றி, நடைபாதையில் பூக்கடை, வேர்க்கடலை வியாபாரம் உள்ளிட்ட கடைகள் வைக்கப்பட்டுள்ளது.
பஸ் நிலைய வளாகத்தில் உள்ள கடைகளுக்கு பொருட்கள் வாங்க வருவோர் மற்றும் கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை போன்ற வெளியூர் செல்லும் நபர்கள் தங்கள் இரு சக்கர வாகனத்தை பஸ் நிலைய வளாகத்தில் உள்ள கடைகளுக்கு முன் தாறுமாறாக நிறுத்திவிட்டுச் செல்கின்றனர்.
மேலும் பஸ் நிலையத்தில் உள்ள கடைகளுக்கு சரக்கு ஏற்றி வரும் லாரிகள் தினசரி பஸ் நிலையத்திற்குள் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தி சரக்குகளை இறக்குகின்றனர்.
பஸ் நிலையத்திற்குள் ஆட்டோக்கள் வரக்கூடாது என எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டும் அனைத்து ஆட்டோக்களும் பஸ் நிலையத்திற்குள் தாறுமாறாக நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்கின்றனர்.
இதனால் பஸ் நிலையத்தில் பஸ் டிரைவர்கள் நேரத்திற்கு வண்டியை எடுக்க முடியாமல் திணறுகின்றனர். மேலும், பயணிகளும் அவதிக்குள்ளாகின்றனர்.
சங்கராபுரம் பஸ் நிலையத்தில் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகன உரிமையாளர்கள் மற்றும் பஸ் நிலையத்திற்குள் வந்து செல்லும் ஆட்டோ, வேன், கார், சரக்கு லாரி போன்றவை மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பஸ் டிரைவர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்னர்.