/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சூளாங்குறிச்சி மணிமுக்தா அணையில் நீர்... வெளியேற்றம்; முழு கொள்ளளவை எட்டியதால் திறப்பு
/
சூளாங்குறிச்சி மணிமுக்தா அணையில் நீர்... வெளியேற்றம்; முழு கொள்ளளவை எட்டியதால் திறப்பு
சூளாங்குறிச்சி மணிமுக்தா அணையில் நீர்... வெளியேற்றம்; முழு கொள்ளளவை எட்டியதால் திறப்பு
சூளாங்குறிச்சி மணிமுக்தா அணையில் நீர்... வெளியேற்றம்; முழு கொள்ளளவை எட்டியதால் திறப்பு
ADDED : டிச 09, 2024 08:18 AM

கள்ளக்குறிச்சி அடுத்த சூளாங்குறிச்சியில் உள்ள மணிமுக்தா அணை விவசாயிகளுக்கு முக்கிய நீர் ஆதாரமாக இருந்து வருகிறது. கல்வராயன்மலையில் பெய்யும் மழை மணி மற்றும் முக்தா ஆறுகள் வழியாக அணைக்கு வருகிறது. மேலும் பாப்பாங்கால் ஓடை வழியாகவும் அணைக்கு நீர் வரத்து ஏற்படுகிறது.
மணிமுக்தா அணையின் மொத்த கொள்ளளவு 36 அடி (736.96 மில்லியன் கன அடி) ஆகும். இந்த அணையை நம்பி 10 கிராமங்களைச் சேர்ந்த 5,493 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
கோமுகி அணை மலை அடிவாரத்தில் இருப்பதால், பருவ மழைக் காலங்களில் அந்த அணை ஓரிரு நாளில் நிரம்பி விடும். ஆனால் மணிமுக்தா அணை தொடர் மழை பெய்தால் மட்டுமே நிரம்புவதற்கான வாய்ப்பு உள்ளது.
கோமுகி அணை நிரம்பி பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில், மணிமுக்தா அணையில் தண்ணீர் தேக்கம் இன்றி காணப்பட்டது. இதனால் மணிமுக்தா அணையை நம்பியிருந்த விவசாயிகள் கவலையில் இருந்தனர்.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு பெஞ்சல் புயல் காரணமாக பெய்த கன மழையில், அணைக்கு நீர் வரத்து அதிகரித்து, அணையின் நீர் மட்டம் கிடு கிடு என உயர்ந்து, முழு கொள்ளவையும் எட்டியது. அணையின் மொத்த கொள்ளளவான 36 அடியில், 34 அடி (590 மில்லியன் கன அடி) தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டது.
நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்தால், அணையின் பாதுகாப்பு கருதி பழைய மற்றும் புதிய ெஷட்டர்கள் வழியாக அணையில் இருந்த ஆறு வழியாக அதிகபட்சமாக 16 ஆயிரம் கன அடி வரை தண்ணீர் வெளியேற்றப்பட்டது. அதன்பின் அணைக்கு நீர் வரத்து குறைந்ததால் ஆறு வழியாக வெளியேற்றும் தண்ணீரின் அளவு படிபடியாக குறைக்கப்பட்டு, தற்போது 400 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதற்கிடையே பழைய மற்றும் புதிய பாசன வாய்க்கால் வழியாகவும் 75 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
அணையிலிருந்து ஆறுகள் வழியாக தண்ணீர் வெளியேற்றும் நிலையில், பல்லகச்சேரி, பாணயங்கால், கொங்கராயபாளையம், கூத்தக்குடி ஆகிய 4 அணைக்கட்டுகளும் நிரம்பி வழிந்தோடுகிறது.
இதனால் அங்கிருந்து செல்லக்கூடிய வாய்க்கால் மூலம் சுற்று வட்டார பகுதியில் உள்ள ஏரிகளுக்கும் நீர் வரத்து ஏற்பட்டு நிரம்பி வருகிறது. மேலும் அணைக்கட்டுகளில் தேங்கி நிற்கும் நீரால், சுற்று வட்டார பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து கிணற்று நீர் பாசனத்திற்கும் வழிவகை ஏற்பட்டுள்ளது.