/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சாதனை மாணவர்களுக்கு அ.தி.மு.க., பழனிசாமி பாராட்டு
/
சாதனை மாணவர்களுக்கு அ.தி.மு.க., பழனிசாமி பாராட்டு
ADDED : ஜூலை 28, 2025 02:15 AM

கள்ளக்குறிச்சி: மருத்துவ சேர்க்கை தரவரிசை பட்டியலில், அரசு பள்ளி பிரிவில் சாதனை புரிந்த கள்ளக்குறிச்சி மாணவர்களை, அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி பாராட்டினார்.
திருக்கோவிலுார் அடுத்த ஆவியூரை சேர்ந்த வேலன் மகன் திருமூர்த்தி, 18; எஸ்.ஒகையூர் சேர்ந்த முருகன் மகள் மதுமிதா, 18; இருவரும் கடந்த 2023 - 24ம் ஆண்டு கள்ளக்குறிச்சி அரசு எலைட் பள்ளியில் பிளஸ் 2 படித்தனர்.
முதல் ஆண்டு நீட் தேர்வில் மருத்துவ இடம் கிடைக்காததால், இருவரும் கடந்த ஓராண்டு நீட் பயிற்சி மேற்கொண்டு, 2வது முறையாக நீட் தேர்வு எழுதினர். அதில், திருமூர்த்தி 720க்கு 572 மதிப்பெண்களும், மதுமிதா 551 மதிப்பெண் பெற்றனர்.
மருத்துவ படிப்பிற்கான சேர்க்கை தரவரிசை பட்டியல் வெளியானது. இதில், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில், மாநில அளவில் திருமூர்த்தி முதலிடமும், மதுமிதா மூன்றாமிடம் பிடித்தனர்.
இருவரும் சேலத்தில் அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது மாணவர்கள் இருவருக்கும் பழனிசாமி லேப்டாப் பரிசு வழங்கி பாராட்டினார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் குமரகுரு, செந்தில்குமார் எம்.எல்.ஏ., உடனிருந்தனர்.