ADDED : செப் 25, 2024 10:52 PM

போதை பொருள் விற்பனை குறித்து தகவல் பெற...
மது விலக்கு அமல் பிரிவு போலீசார் புது முயற்சி
கள்ளக்குறிச்சி, செப். 26-
கள்ளக்குறிச்சி உட்கோட்டத்தில் நடைபெறும் சாராயம், கஞ்சா மற்றும் மது விற்பனையை பொதுமக்கள் தயக்கமின்றி தெரிவிக்க ஏதுவாக மதுவிலக்கு அமல்பிரிவு சார்பில் புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி கருணாபுரம், மாதவச்சேரி, சேஷசமுத்திரம் ஆகிய பகுதிகளில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்த 229 பேரின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதில் 68 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மாவட்டத்தில் சாராயம் காய்ச்சுபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களை கைது செய்யும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர். தற்போது, கள்ளக்குறிச்சி பகுதியில் சாராய விற்பனை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால், கல்வராயன்மலையில் சில இடங்களில் சாராயம் காய்ச்சுதல் மற்றும் விற்பனை செய்யும் பணி ரகசியமாக தொடங்கி உள்ளது.
மேலும், மாவட்டத்தில் மதுபாட்டில், கஞ்சா மற்றும் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனையும் நடக்கிறது.
பொதுமக்கள் தங்களது பகுதிகளில் நடைபெறும் சாராயம், மது மற்றும் கஞ்சா விற்பனை குறித்த தகவலை தெரிவிக்கலாம், தகவல் அளிப்பவரின் விபரம் ரகசியம் காக்கப்படும் எனவும் மாவட்ட காவல்துறை சார்பில் கூறப்பட்டுள்ளது. ஆனாலும், இது தொடர்பான தகவல் தெரிவிப்பதில் பொதுமக்களுக்கு தயக்கம் உள்ளது.
இந்நிலையில், கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் தொடர்பு எண் குறிப்பிட்ட புகார் பெட்டியை வைத்து வருகின்றனர்.
மாவட்டத்தில் நடைபெறும் போதைப்பொருள் விற்பனை தொடர்பான தகவலை பொதுமக்கள் எவ்வித தயக்கமுமின்றி மனுவாக எழுதி, புகார் பெட்டியில் போடலாம்.
இரண்டு நாட்களுக்கு ஒரு முறை புகார் பெட்டி திறக்கப்பட்டு, அதில் உள்ள மனுக்கள் மீது விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும். அல்லது புகார் பெட்டியின் மீது உள்ள எண்ணை தொடர்பு கொண்டும் தெரிவிக்கலாம்.
முதற்கட்டமாக கள்ளக்குறிச்சி, சின்னசேலம் மற்றும் கச்சிராயபாளையம் பஸ்நிலையத்தில் புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. மேலும், கல்வராயன்மலை பகுதியில் புகார்பெட்டி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
