/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஆஞ்சநேயர் கோவில்களில் அனுமன் ஜெயந்தி விழா
/
ஆஞ்சநேயர் கோவில்களில் அனுமன் ஜெயந்தி விழா
ADDED : ஜன 12, 2024 04:14 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி சேலம் மெயின் ரோட்டில் உள்ள 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா நடந்தது.
அதனையொட்டி, ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரமும் தொடர்ந்து தீபாராதனை மற்றும் தங்கக்கவசம் அணிவிக்கப்பட்டது. பின்னர், சுவாமிக்கு வடை மாலை சாற்றப்பட்டது. பூஜைகளை அர்ச்சகர் சங்கர் நடத்தினார். ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.
அதேபோல், நீலமங்கலம் சீதாலட்சுமண அனுமன் சமேத கோதண்டராமர் கோவிலில் நேற்று அதிகாலை மூலவர், உற்சவர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, 108 வடை மாலை சாற்றப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்து, பகவத் சங்கல்பத்திற்குப்பின் ஆஞ்சநேயர் மூலமந்திரம் வாசித்து அர்ச்சனை நடந்தது.
அயோத்தி ராமஜென்ம பூமி ராமர் கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடக்க வேண்டி ராம பக்தர்கள் நாம சங்கீர்த்தன பஜனை பாடல்கள் பாடினர்.
சின்னசேலம்
சின்னசேலம் பஸ் நிலையம் அருகே உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று காலை 9:00 மணிக்கு சுவாமிக்கு 17 வகையான திரவியங்களால் அபிஷேகம், அலங்காரம் நடந்தது. தொடர்ந்து தீபாராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு சிறப்பு பூஜையும், சுவாமி உள் பிரகார வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அனுமன் பக்தர்கள் அனைவரும் பஜனை பாடல்கள் பாடினர். இன்று காலை 11:00 மணிக்கு விடையாற்றி உற்சவம் நடக்கிறது.
மூங்கில்துறைப்பட்டு
ராவத்தநல்லுார் ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயருக்கு நேற்று அதிகாலை 3:00 மணிக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து வெற்றிலை, துளசி, வடை, பூ, பழம் உள்ளிட்ட வற்றால் மாலைகள் அணிவிக்கப்பட்டு, தீபாராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு சுவாமிக்கு வெண்ணெய் காப்பு அலங்காரம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
சங்கராபுரம்
காட்டுவனஞ்சூர் ஸ்ரீ ராமபக்த ஆஞ்சநேயர் கோவிலில் ஆஞ்சநேயருக்கு 108 லிட்டர் பாலாபிேஷகம் நடந்தது. பின் ஆஞ்சநேய சுவாமிக்கு வடைமாலை, ஜாங்கிரி மாலை மற்றும் சந்தனக் காப்பு சாத்தப்பட்டது. தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
திருக்கோவிலுார்
திருக்கோவிலுார் என்.ஜி.ஜி.ஓ., நகர் சுந்தர ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று காலை 9:00 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. மாலை வெண்ணைக் காப்பு அலங்காரத்தில் அர்ச்சனை, நாமசங்கீர்த்தனம், மகா தீபாராதனை நடந்தது. ஜீயர் தேகளீச ராமானுஜாச்சாரியர் சுவாமிகள் தலைமையில் நடந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். புத்துார் பாலகோபால சுவாமி பஜனை குழுவினரின் பஜனை நடந்தது.