ADDED : நவ 02, 2025 04:13 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் மாவட்ட சுகாதார பேரவைக் கூட்டம் நடந்தது.
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடந்த கூட்டத்திற்கு, கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். சங்கராபுரம் தொகுதி எம்.எல்.ஏ., உதயசூரியன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், வட்டார சுகாதார பேரவையில் முடிவெடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து திறனாய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி முன்னுரிமை வழங்க வேண்டிய துணை சுகாதாரம், சுகாதார மற்றும் மருத்துவமனைக் கட்டடங்கள், தலைமை உபகரணங்கள், கட்டடங்கள் பராமரிப்பு ஆகியவற்றிற்கு அதிக முன்னுரிமை அளித்து பணிகள் மேற்கொள்ள வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டிய சுகாதார குறியீடுகள், ஊட்டச்சத்து மேம்பாடு, கர்ப்பிணிகளுக்கு சிறப்பு திட்டங்கள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.
மாவட்டத்தில் சுகாதார குறியீடுகள் தொடர்பான நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என சம்பந்தப்பட்ட மருத்துவ அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் டி.ஆர்.ஓ., ஜீவா, மாவட்ட சுகாதார அலுவலர் ராஜா உள்ளிட்டத் தொடர்புடையத் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

