பெரிய ஏரி பாசன வாய்க்கால்கள் ஆக்கிரமிப்பால் மாயம்!: மழைநீர் செல்ல வழியின்றி குளம், ஏரி வறண்டது
பெரிய ஏரி பாசன வாய்க்கால்கள் ஆக்கிரமிப்பால் மாயம்!: மழைநீர் செல்ல வழியின்றி குளம், ஏரி வறண்டது
UPDATED : ஜூலை 09, 2026 01:13 PM
ADDED : ஜூலை 08, 2026 08:21 PM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் பெரிய ஏரி பாசன வாய்க்கால் முற்றிலுமாக அடைபட்டு அதன்மீது கட்டடங்கள் கட்டி நீர் வழித்தடம் மறிக்கப்பட்டதால், ஏரி மூலம் நீர் பெற்று வந்த குளம் மற்றும் தென்கீரனுார் ஏரி வறண்டு பாழாகி வருகிறது.
கள்ளக்குறிச்சியில் கோமுகி அணையில் இருந்து, கோமுகி ஆறு வழியாக கள்ளக்குறிச்சி பெரிய ஏரிக்கு தண்ணீர் வருகிறது. ஏரி நிரம்பிய பின்பு வெளியேறும் நீர் காந்தி ரோடு பாசன வாய்க்கால் மூலம் நான்கு முனை சந்திப்பினை கடந்து தியாதுருகம் ரோடு வழியாக முப்பியம்மன் கோவில் குளத்தை நிரப்புகிறது. அதன் பின்பு, அங்கிருந்து தியாகதுருகம் சாலையின் குறுக்கே பல்வேறு இடங்களில் பிரிந்து அங்குள்ள விளை நிலங்களுக்கு பாசன வசதியை ஏற்படுத்தி தென்கீரனுார் ஏரியில் சென்று கலக்கிறது.
இந்த பாசன வாய்க்கால் 1.5 கி.மீ., துாரம் கொண்டது. இந்த பாசன வாய்க்காலின் பெரும் பகுதி ஆக்கிரமிக்கப்பட்டு, கட்டடங்கள் கட்டி மூடி மறைக்கப்பட்டு, வாய்க்கால் இருந்த இடம் தெரியாமல் அழிக்கப்பட்டது. இதனால், பழைய மாரியம்மன் கோவில் அருகே உள்ள முப்பியம்மன் கோவில் குளத்திற்கு நீர் வரத்து முற்றிலும் நின்றுபோனதால், பல ஆண்டுகளாக இக்குளம் வறண்டு பாழாகி கிடக்கிறது.
ஏரிக்கு செல்லும் பாசன வாய்க்காலை ஆக்கிரமித்து கோவில் கட்டப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனால், காந்தி ரோடு பகுதியில் இவ்வாய்க்கால் மீது கட்டப்பட்டிருந்ததாக 50 ஆண்டு கால கோவில்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் இடித்து அகற்றப்பட்டது. அதன்பிறகு, கோவில் இடித்து அகற்றப்பட்ட பகுதியில் 200 மீட்டர் துார வாய்க்காலை மட்டும் பொதுப்பணித்துறையினர் சீரமைத்தனர். மீதமுள்ள 1.3 கி.மீ., துார பாசன வாய்க்கால்களை மீட்டெடுக்கவில்லை.
பொதுப்பணித்துறை அதிகாரிகளின் மெத்தன செயல்பாட்டால், நகரப்பகுதியில் சேகரமாகும் கழிவு நீர் இந்த வாய்க்காலில் கலந்து கோமுகி ஆற்றில் வழிந்தோடும் சாக்கடை கால்வாயாக மாறியது.
அத்துடன் பெரிய ஏரியில் இருந்து கோட்டைமேடு வழியாக கருணாபுரம் கல்லாம்பாரை குட்டையிலிருந்து பிரியும் வாய்க்கால் முற்றிலும் கட்டடங்கள் கட்டி அடைக்கப்பட்டதால் இந்த வாய்க்கால் மூலமாக தென்கீரனுார் ஏரிக்கு நீர் செல்லும் பாதையும் மறைந்து போனது.
இதனால் தென்கீரனுார் ஏரியில் நீர் சேகரமாகும் பகுதிகளின் பரப்பும் குறைந்தது. இதனால், அதிக மழை பொழியும் காலங்களில் தண்ணீர் ஏரிக்கு செல்ல வழியின்றி குடியிருப்புகளுக்குள் புகுந்து விடும் அவலமும் நீடித்து வருகிறது. இது போன்று மாவட்டம் முழுதும் நீர்வளத்துறைக்கு சொந்தமான வரத்து வாய்க்கால்களை ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டி நீராதாரங்கள் அழிக்கும் செயல்கள் சர்ச சாதாரணமாக அரங்கேறி வருகிறது.
இதனை மாவட்ட வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, நகராட்சிகள் தடுக்காததால், எதிர்காலத்தில் குளம், ஏரிகள் மாவட்டத்தில் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போகும் அபாயம் உள்ளது.
எனவே பெரியேரியிலிருந்து மேட்டு தெரு வழியாக வெளியேறும் பாசன வாய்க்காலை முழுமையாக துார் வாரி அதன் வழித்தடத்தை பாதிக்கும் கட்டடங்களை இடித்து அகற்றி, முப்பியம்மன் கோவில் குளத்திற்கும், துருகம் சாலை வழியாக பாசன நிலங்களை கடந்து தென்கீரனுார் ஏரிக்கு செல்லும் நீர் வரத்து வாய்க்கால்களை சீரமைத்திட பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
