/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அரசம்பட்டில் சாலை மறியல் : போக்குவரத்து பாதிப்பு
/
அரசம்பட்டில் சாலை மறியல் : போக்குவரத்து பாதிப்பு
ADDED : ஆக 08, 2025 09:39 PM

சங்கராபுரம்; அரசம்பட்டு கிராமத்தில் போலீஸ் கைது செய்தோரை விடுவிக்க கோரி 4 மணி நேரம் மறியல் நடந்தது.
சங்கராபுரம் அடுத்த அரசம்பட்டு கிராமத்தில் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில் இரு தரப்பினரிடையே பிரச்னை ஏற்பட்டது. இதுசம்பந்தமாக கடந்த 2ம் தேதி கள்ளக்குறிச்சி ஆர்.டி.ஓ., லுார்துசாமி தலைமையில் சமாதான கூட்டம் நடந்தது. அதில் இருதரப்பினரிடையே உடன்பாடு ஏற்படாததால், கோவில் தேர்த்திருவிழாவிற்கு தடை விதித்து ஆர்.டி.ஓ., உத்தரவு பிறப்பித்தார். உத்தரவு நகல் கோவில் வளாகத்தில் ஒட்டப்பட்டது. ஆர்.டி.ஓ., உத்தரவில் கோவிலில் பாரதம் படிக்க தடை விதித்திருந்த நிலையில் உத்தரவை மீறி கடந்த 3 நாட்களாக பாரதம் தொடர்ந்து படிக்கப்பட்டது. ஆர்.டி.ஓ., உத்தரவை மீறி பாரதம் படித்ததால், ஒரு தரப்பை சேர்ந்த சுப்ரமணியன் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டவர்கள் மீது சங்கராபுரம் போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து சுப்ரமணியன், ராமர் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
இருவரை கைது செய்தததை கண்டித்து நேற்று காலை 6:00 மணிக்கு அரசம்பட்டு பஸ் நிலையத்தில் 200க்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த ஏ.டி.எஸ்.பி., திருமால், திருக்கோவிலுார் டி.எஸ்.பி., பார்த்திபன், இன்ஸ்பெக்டர் விநாயகமுருகன் தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
கைது செய்யப்பட்ட சுப்ரமணியன், ராமரை விடுவித்தால் மட்டுமே போராட்டம் வாபஸ் பெறுவோம் என சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். இது குறித்து போலீசார் உயரதிகாரிகளிடம் கலந்தாலோசித்தபின் கைது செய்யப்பட்ட இருவரும் போலீஸ் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். அதன்பிறகு மறியல் கைவிடப்பட்டது. மறியல் காரணமாக 6:00 மணி முதல் 10:00 மணி வரை 4 மணி நேரம் சங்கராபுரம்-அரசம்பட்டு, பாலப்பட்டு மார்கத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.