/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சி நகராட்சியின் எல்லைகள்... விரிவுபடுத்தப்படுமா? ஒரே இடத்தில் மாவட்ட அலுவலகங்கள் தேவை
/
கள்ளக்குறிச்சி நகராட்சியின் எல்லைகள்... விரிவுபடுத்தப்படுமா? ஒரே இடத்தில் மாவட்ட அலுவலகங்கள் தேவை
கள்ளக்குறிச்சி நகராட்சியின் எல்லைகள்... விரிவுபடுத்தப்படுமா? ஒரே இடத்தில் மாவட்ட அலுவலகங்கள் தேவை
கள்ளக்குறிச்சி நகராட்சியின் எல்லைகள்... விரிவுபடுத்தப்படுமா? ஒரே இடத்தில் மாவட்ட அலுவலகங்கள் தேவை
ADDED : பிப் 15, 2024 05:55 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி நகராட்சியின் எல்லைப் பகுதியை மறுவரையறை செய்து, சுற்று வட்டாரத்தில் 5 கி.மீ., துாரத்தில் உள்ள கிராமங்களை உள்ளடக்கி நகராட்சி பரப்பளவை விரிவுபடுத்தும் பணியை துவக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விழுப்புரத்தை இரண்டாக பிரித்து, அதில் கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் கடந்த 2019ம் ஆண்டு நவ., 26ம் தேதி உருவாக்கப்பட்டது. மாவட்ட துவக்க விழாவில், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, ரிங் ரோடு உள்ளிட்ட மாவட்ட வளர்ச்சிக்கான புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டதால், கள்ளக்குறிச்சி பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தொடர்ந்து, கள்ளக்குறிச்சி அருகே வீரசோழபுரத்தில் அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 35 ஏக்கர் இடத்தில், ரூ.104 கோடி மதிப்பில் கலெக்டர் அலுவலக கட்டுமான பணிகள் கடந்த 2020ம் ஆண்டு துவங்கியது. ஆனால், ஐகோர்ட் தடை விதித்ததால் கலெக்டர் அலுவலக கட்டுமான பணிகள் கிடப்பில் போடப்பட்டது.
இதனால், கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டி வளாகத்தில் கலெக்டர் அலுவலகமும், உலகங்காத்தானில் தனியார் கல்லுாரி கட்டடத்தில் எஸ்.பி., அலுவலகமும் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது.
நகரப்பகுதியில் போதிய இடமில்லை என்ற காரணத்தை சுட்டிக்காட்டி, பல்வேறு மாவட்ட அலுவலகங்கள் வெவ்வேறு பகுதியில் அமைகிறது. உதாரணமாக, பொதுப்பணித்துறை மாவட்ட அலுவலகம் மற்றும் கெஸ்ட் ஹவுஸ் ஆகியவை தியாகதுருகம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளன.
இதுபோன்று மாவட்ட அலுவலகங்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்படுவதால், தலைநகரான கள்ளக்குறிச்சி நகரின் வளர்ச்சி குறைந்து, இங்குள்ள மக்கள் பாதிப்படைவர்.
குறிப்பாக, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை, மாவட்ட தொழில் மையம், தோட்டக்கலை, வேளாண் துறை உள்ளிட்ட மாவட்ட அலுவலகங்கள் ஆங்காங்கே வாடகை கட்டடத்தில் இயங்கி வருகின்றன. இதில், மார்க்கெட் கமிட்டிக்கு சொந்தமான கட்டடங்களை பயன்படுத்தி வரும் கலெக்டர் அலுவலகத்திற்கான வாடகை இதுவரை வழங்கப்படாமல் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.
மேலும், ஆங்காங்கே மாவட்ட அலுவலகங்கள் செயல்படுவதால் மக்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர். ஒரே இடத்தில் மாவட்ட அலுவலகங்கள் அமைக்கப்பட்டால், மக்களின் சிரமம் குறையும்.
எனவே, மாவட்ட அலுவலகங்கள் வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்வதை தடுக்க, கள்ளக்குறிச்சி நகராட்சியின் எல்லைப்பரப்பை விரிவுபடுத்த வேண்டும். கள்ளக்குறிச்சி நகரை ஒட்டியவாறு 5 கி.மீ., தொலைவுகளில் உள்ள கிராமங்களை நகராட்சி கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும். அவ்வாறு செய்தால், நகரின் பரப்பளவு அதிகமாவதுடன், கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட அனைத்து துறை மாவட்ட அலுவலகங்களும் கள்ளக்குறிச்சி நகரை ஒட்டியவோறு அமைக்கலாம். இதற்கான பணிகளை துவங்கிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

