/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
உளுந்துார்பேட்டையில் பஸ் நிலையம் அமைவது... எப்போது? : வாகன ஓட்டிகள், பொதுமக்கள் எதிர்பார்ப்பு
/
உளுந்துார்பேட்டையில் பஸ் நிலையம் அமைவது... எப்போது? : வாகன ஓட்டிகள், பொதுமக்கள் எதிர்பார்ப்பு
உளுந்துார்பேட்டையில் பஸ் நிலையம் அமைவது... எப்போது? : வாகன ஓட்டிகள், பொதுமக்கள் எதிர்பார்ப்பு
உளுந்துார்பேட்டையில் பஸ் நிலையம் அமைவது... எப்போது? : வாகன ஓட்டிகள், பொதுமக்கள் எதிர்பார்ப்பு
ADDED : ஆக 29, 2025 02:58 AM

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டையில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்படும் என சட்டசபையில் முதல்வர் அறிவித்து 2 ஆண்டுகளாகியும், இடம் தேர்வு பிரச்னையால் பஸ் நிலையம் பணி துவங்கப்படாமல் இழுபறியில் உள்ளது. உளுந்துார்பேட்டை நகராட்சி பகுதி சென்னை, திருச்சி, சேலம், மதுரை, வேலுார், திருவண்ணாமலை, கடலுார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளின் மைய பகுதியாக இருந்து வருகிறது. இதனால் இப்பகுதி வழியாக தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் இரவு பகலாக வந்து செல்கின்றன.
முக்கியத்துவம் வாய்ந்த உளுந்துார்பேட்டை பகுதி யில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு பஸ் நிலையம் இல்லாததால், சாலையில் பஸ்களை நிறுத்தி பயணிகளை இறக்கி ஏற்றிச் சென்றனர்.
பின், பஸ் நிலையம் கட்டப்பட்டதைத் தொடர்ந்து , பஸ்கள் பஸ் நிலையத்திற்குள் வந்து சென்ற வண்ணம் இருந்தன.
ஆனால், காலப்போக்கில் வாகன போக்குவரத்து அதிகரித்ததால் போக்குவரத்து நெரிசல், ஏற்படுவது தொடர்கதையாக உள்ளது.
மேலும், பஸ் நிலையம் விரிவாக்கம் செய்யாததால் மீண்டும் பஸ் நிலையம் வெளியே நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்கும்  நிலை தொடர்கிறது.
தற்போது சாலைகளில் ஆக்கிரமிப்பு அதிகாரித்துள்ளதால் பஸ்கள் மிகுந்த சிரமத்துடன் பஸ் நிலையம் வரவேண்டிய நிலை உள்ளது. இதன் காரணமாக சொகுசு பஸ்கள் உளுந்துார்பேட்டை பகுதிக்குள் வராமல் தேசிய நெடுஞ்சாலையிலேயே சென்று விடுகின்றன.
உளுந்துார்பேட்டை நகராட்சியாக தரம் உயர்ந்தாலும் அதற்கான பரப்பளவும், வளர்ச்சியும் இல்லாமல் உள்ளது. இதனால் உளுந்துார் பேட்டை பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என திட்டமிடப்பட்டு, மாற்று இடத்தில் பஸ் நிலையம் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளில் அரசியல் கட்சியினர் இறங்கினர்.
பஸ் நிலையம் அமைப்பதற்கு 6  ஏக்கர் நிலப்பரப்பு தேவைப்படும் என திட்டமிடப்பட்டு உளுந்துார்பேட்டை அஜீஸ் நகர் ரவுண்டான அருகே மற்றும் பு.மாம்பாக்கம் அருகே என 2 இடங்களில் ஆய்வு செய்து ஏதேனும் ஒன்றை  தேர்வு செய்வது என முடிவு செய்தனர்.
ஆனால். அரசியல் கட்சியினரில் பலர் மற்றும் அதிகாரிகள் திருச்சி, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதி  பஸ்கள் வந்து செல்வதற்கு அஜீஸ் நகர் ரவுண்டானா இடத்தில் அமைப்பதற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.  ஆனால், ஒரு சில அரசியல் கட்சியினர் பு.மாம்பாக்கம் இடத்தில் அமைய ஆர்வம் கட்டி வருகின்றனர்.
இதற்கிடையேஅஜீஸ் நகர் ரவுண்டானா அருகே பஸ் நிலையம் அமைப்பதற்கு போதுமான இடவசதி உள்ளதா என்பதை அறிய  வருவாய்த் துறையினர் மற்றும் அதிகாரிகள் அளவீடு செய்தனர்.
ஆனால், அஜீஸ் நகர் பகுதியில் உள்ள ஒரு சிலர், விளையாட்டு மைதானத்தை பஸ் நிலையத்திற்கு எடுக்கக் கூடாது எனக் கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் வருவாய் துறையினர் அளவீடு செய்யும் பணியை பாதியிலேயே விட்டுச் சென்றனர்.
ஒரு சிலரின் எதிர்பால் அஜீஸ் நகர் ரவுண்டானா அருகே பஸ் நிலையம் வருவது தடுக்கப்படுவதோடு பலரது ஆதரவுக்கு முட்டுக் கட்டை ஏற்பட்டுள்ளது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சட்டசபையில் உளுந்துார்பேட்டையில் புதிய பஸ் நிலையம் கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கான நடவடிக்கை ஏதும் முழுவீச்சில் எடுக்கப்படவில்லை.
எனவே, மாவட்ட நிர்வாகம் அனைத்து தரப்பினரும் ஏற்றுக் கொள்ளும் இடத்தில் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கு உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

