ADDED : ஆக 12, 2026 07:11 PM
மணிமுக்தா அணையில் சுற்றுலா மேம்பாட்டு பணி துவங்குவது... ரூ.2.11 கோடி மதிப்பில் அடிக்கல்நாட்டியும் அதிகாரிகள் அலட்சியம்
கள்ளக்குறிச்சி: சூளாங்குறிச்சி மணிமுக்தா அணையில் ரூ. 2.11 கோடி மதிப்பில் சுற்றுலா மேம்பாட்டு பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில் இதுவரை பணிகள் துவங்கப்படாமல் உள்ளது.
கள்ளக்குறிச்சி அடுத்த சூளாங்குறிச்சியில் 36 அடி உயரம் (736.96 மில்லியன் கன அடி) கொள்ளளவு கொண்ட மணிமுக்தா அணை உள்ளது. கல்வராயன்மலை பகுதியில் பெய்யும் மழை நீர் மணி மற்றும் முக்தா ஆறுகள் வழியாகவும், மூரார்பாளையம் பாப்பாங்கால் ஓடையில் இருந்தும் அணைக்கு தண்ணீர் வருகிறது. ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழையின் போது அணையில் தண்ணீர் சேமித்து வைத்து, விவசாய பாசனத்திற்காக மதகு வழியாக திறந்து விடப்படும். இதன் மூலம் புதிய மற்றும் பழைய பாசன பகுதியில் உள்ள 5,493 ஏக்கர் பரப்பளவிலான விளைநிலங்கள் பயன்பெறும்.
மழைக்காலத்தில் அணை முழு கொள்ளளவை எட்டும் பட்சத்தில் கடல்போல பிரம்மாண்டமாக காட்சியளிக்கும். இதைப்பார்க்க பொதுமக்கள் பலர் தங்களது குடும்பத்தினருடன் அணைக்கு வருவது வழக்கம். எனவே, மணிமுக்தா அணையை சுற்றுலாதலமாக்க வேண்டுமென்பது அப்பகுதி பொதுமக்களின் பல ஆண்டு கால கோரிக்கையாக இருந்தது. அதன்படி, கடந்த 2025ம் ஆண்டு நடந்த சட்டசபை கூட்டத்தொடரில், சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் வகையில் மணிமுக்தா அணையில் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு, ரூ. 2.11 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
தொடர்ந்து, மணிமுக்தா அணைக்கு அருகே பழையசிறுவங்கூர் செல்லும் சாலையில் உள்ள காலி இடத்தில் சுற்றுலா மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டு, கடந்த மார்ச் மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது. அப்போதைய கலெக்டர் பிரசாந்த் அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கினார். இங்கு, நுழைவு வாயில், கட்டணம் வசூலிக்கும் அறை, புல் தரை, ஆழ்துளை கிணறு, பூங்கா, வாகனம் நிறுத்தும் இடம், நடைபாதை, பாதுகாப்பு வேலி, குழந்தை விளையாட்டு உபகரணங்கள், கழிப்பறை உட்பட பல்வேறு வசதிகளுடன் சுற்றுலா மேம்பாட்டு பணிகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.
இதனால், அப்பகுதி வளர்ச்சி பெறுவதுடன் பொதுமக்களிடமிருந்து வசூலிக்கப்படும் கட்டணத்தால் அரசுக்கு லாபம் கிடைக்கும். தொடர்ந்து, சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் அனைத்து துறை அதிகாரிகளும் ‘பிஸி’யான நிலையில், ஆட்சி மாற்றம் நடந்ததால் இப்பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
அடிக்கல்நாட்டி 5 மாதங்கள் முடிவடைந்த நிலையில் இதுவரை எவ்வித பணியும் தொடங்கப்படாமல் இருப்பது அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, தற்போதைய கலெக்டர் பத்மஜா ஆய்வு மேற்கொண்டு, கிடப்பில் போடப்பட்ட சூளாங்குறிச்சி மணிமுக்தா அணை சுற்றுலா மேம்பாட்டு பணியை உடனடியாக துவங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
