வெள்ளிமலை டெப்போவிற்கு தேவையான வசதிகள்... ஏற்படுத்தப்படுமா?பயணப்படி, உணவகமின்றி பணியாளர்கள் புலம்பல்
வெள்ளிமலை டெப்போவிற்கு தேவையான வசதிகள்... ஏற்படுத்தப்படுமா?பயணப்படி, உணவகமின்றி பணியாளர்கள் புலம்பல்
UPDATED : ஜூன் 03, 2026 03:44 PM
ADDED : ஜூன் 03, 2026 03:40 PM

கள்ளக்குறிச்சி: வெள்ளிமலை அரசு போக்குவரத்து கழக டெப்போவில் பல்வேறு வசதிகள் ஏற்படுத்தாமல் இருப்பதால் அங்கு பணிபுரியும் பணியாளர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த வீரசோழபுரத்தில் கடந்த டிச., 26ம் தேதி நடந்த புதிய கலெக்டர் அலுவலக திறப்பு விழாவில், மகளிர் விடியல் பயண திட்டம் கல்வராயன்மலை பகுதி மக்களுக்கும் கிடைக்கும் வகையில் விரிவுபடுத்தப்படும் என முன்னாள் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். தொடர்ந்து, கடந்த பிப்., மாதம் வெள்ளிமலையில் புதிதாக அரசு பஸ் டெப்போ திறக்கப்பட்டது.
இந்த டெப்போவில் இருந்து கல்வராயன்மலையில் உள்ள கிராமங்களுக்கு செல்லும் வகையில் 10 சிற்றுந்துகள் இயக்கப்படுகிறது. இதற்காக, 27 டிரைவர்கள், 27 கண்டெக்டர்கள் உட்பட 60க்கும் மேற்பட்ட அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். டெப்போ துவங்கி 4 மாதங்களுக்கு மேலாகும் நிலையில் பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்படாததால், இங்கு பணிபுரியும் ஊழியர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர்.
டெப்போவில் பணிபுரியும் பணியாளர்களின் நலனுக்காக போக்குவரத்து கழகம் சார்பில் மலிவு விலை உணவகம் அமைக்கப்படுவது வழக்கம். ஆனால், வெள்ளிமலை டெப்போவில் மலிவுவிலை உணவகம் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.
இதனால், கள்ளக்குறிச்சி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் இருந்து கல்வராயன்மலைக்கு செல்லும் ஊழியர்கள் வெளியில் சாப்பிட வேண்டிய நிலை நீடிக்கிறது. அதேபோல், மலைப்பகுதியில் பணிபுரியும் அனைவருக்கும் மாத சம்பளத்துடன், பயணப்படியாக ரூ.4 ஆயிரம் கூடுதலாக வழங்க வேண்டும். ஆனால், வெள்ளிமலை டெ்போவில் பணிபுரியும் பணியாளர்களுக்கு கடந்த 4 மாதங்களாக மலை பயணப்படி வழங்கப்படவில்லை.
வெள்ளிமலை ஊராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள டெப்போ இடத்தை அரசு போக்குவரத்து கழகத்திற்கு மாற்ற வேண்டும். இதுவரை இடம் மாற்றப்படாமல் ஊராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டிலேயே இருப்பதால், டெப்போவிற்கான மின்சார கட்டணத்தை ஊராட்சி நிர்வாகமே செலுத்தி வருகிறது.
ஊராட்சியின் வளர்ச்சி திட்ட பணிக்காக அரசு ஒதுக்கீடு செய்யும் பணம் போதுமானதாக இல்லாத நிலையில், டெப்போவிற்கான மின்சார கட்டணத்தையும் ஊராட்சி நிர்வாகமே சுமக்க வேண்டிய நிலை நீடிக்கிறது. மின்சார கட்டணம் ரூ.20 ஆயிரத்துக்கும் அதிகமாக இருப்பதால் இந்த தொகையை செலுத்த ஊராட்சி நிர்வாகத்தினர் மறுக்கின்றனர்.
அதேபோல், டெப்போவில் ஜெனரேட்டர் அமைக்கப்படவில்லை. இதனால், அவ்வப்போது ஏற்படும் மின் நிறுத்தத்தாலும், மழைக்காலத்தில் மின்சாரம் துண்டிக்கப்படுவதாலும் டெப்போவில் பணிபுரியும் ஊழியர்கள் கடும் சிரமமடைகின்றனர். மேலும், வாகனங்களை பழுதுபார்க்கும் பணிகள் இதுவரை தொடங்கப்படாமல் இருப்பதால், பஸ்களில் ஏற்படும் பழுதினை சரிசெய்ய கள்ளக்குறிச்சியில் உள்ள டெப்போவிற்கு பஸ்சினை ஓட்டி செல்கின்றனர். இதனால், பணியாளர்களுக்கு கூடுதல் பணிச்சுமையும், கூடுதல் எரிபொருள் செலவும் ஏற்பட்டுள்ளது. எனவே, வெள்ளிமலை டெப்போவிற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி தர போக்குவரத்து கழக நிர்வாகம் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
