ADDED : செப் 10, 2026 04:31 PM
புதுப்பட்டு – சேராபட்டு 18 கி.மீ., துார சாலை... விவசாயிகள், பொதுமக்கள் எதிர்பார்ப்பு
மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அடுத்த புதுப்பட்டில் இருந்து கல்வராயன்மலையில் உள்ள சேராப்பட்டு வரை உள்ள 18 கி.மீ., துார சாலையை அகலப்படுத்த வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மூங்கில்துறைப்பட்டு அடுத்து புதுப்பட்டு கிராமத்தைச் சுற்றி 10க்கும் மேற்பட்ட உட் கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் அன்றாடம் தங்கள் தேவைகளுக்கு புதுப்பட்டு வரவேண்டிய நிலை உள்ளது.
அதுமட்டுமில்லாமல் விவசாயம் அதிகம் நிறைந்த கிராமங்களாக இப்பகுதி இருப்பதால் கல்வராயன்மலைக்குச் செல்ல வேண்டுமென்றால் புதுபட்டு வந்து பிறகு மூலக்காடு வழியாக சேராப்பட்டு, வெள்ளிமலை ஆகிய பகுதிகளுக்குச் செல்ல வேண்டும்.
கல்வராயன்மலைக்கு சுற்றுலா பயணிகள் இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வருகின்றனர். இப்பகுதியில் சாலை குறுகலாக இருப்பதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது.
புதுப்பட்டிலிருந்து மூலக்காடு வரை ஒரு வழிச் சாலையை இரு வழிச் சாலையாக மாற்றினால் விபத்துகள் தவிர்க்கப்படலாம். அதேபோல் மூலக்காடு மலை அடிவாரத்தில் இருந்து சேராப்பட்டு வரை சாலை ஒரு வழிச்சாலையாக இருப்பதால் மலைக்குச் செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றன.
ஒரு வாகனம் சென்றால் மற்றொரு வாகனம் முந்திச் செல்ல கூட சாலை வசதி இல்லாமல் இருந்து வருகிறது. இந்த சாலைகளை அகலப்படுத்தினால் போக்குவரத்திற்கு எவ்வித இடையூறும் இல்லாமலும் விபத்துகள் தவிர்க்கப்படும்.
புதுப்பட்டு பகுதியில் இருந்து சேராப்பட்டு வரை செல்லக்கூடிய வழிகளில் கொடியனுார் அருவி, மான் கொம்பு அருவி என இரண்டு அருவிகள் உள்ளன. இந்த இரண்டு அருவிகளுக்கும் சுற்றுலா பயணிகள் அடிக்கடி வந்து செல்கின்றனர். கொடியனுார் அருவியானது மலை அடிவாரத்துக்கு கீழே அமைந்துள்ளது.
ஆனால் மான் கொம்பு அருவியானது மலைக்கு நடுவே அமைந்துள்ளதால் அங்கு செல்வதற்கு பொதுமக்கள் கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களில் செல்லும்போது சிரமப்பட்டு செல்கின்றனர்.
மலைகளில் விளையும் விவசாய விலை பொருட்களை டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில் கீழே கொண்டு வருவதற்குள் விவசாயிகள் பெரும்பாடு படுகின்றனர். எனவே, விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் நலன் கருதி புதுப்பட்டிலிருந்து சேராப்பட்டு வரையிலான 18 கி.மீ., துார சாலையை அகலப்படுத்தி போக்குவரத்துக்கு எவ்வித இடையூறுகள் இன்றி சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
