/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அங்கன்வாடி மையமாக மாறிய சமூதாய நலக்கூடம்
/
அங்கன்வாடி மையமாக மாறிய சமூதாய நலக்கூடம்
ADDED : மே 15, 2024 11:58 PM

ஸ்ரீபெரும்புதுார்:சென்னக்குப்பம் ஊராட்சியில், தனியார் சி.எஸ்.ஆர்., நிதியின் கீழ், 60 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட சமூதாய நலக் கூடத்தில், அங்கன்வாடி மையமாக செயல்படுவதால், பொதுமக்கள் சுப நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
குன்றத்துார் ஒன்றியம், சென்னக்குப்பம் ஊராட்சியில் 1,000க்கும் அதிகமான வீடுகள் உள்ளன. இங்கு, லாரி, கார் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலைகள் மற்றும் அதன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் பன்னாட்டு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதனால், ஊராட்சிக்கு தொழில் வரி, கட்டட வரி என, ஆண்டிற்கு பல கோடி வருவாய் கிடைக்கிறது.
தவிர, அப்பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலைகள், தங்களின் சி.எஸ்.ஆர்., நிதியின் கீழ், பல கோடி மதிப்பில் குளம், ஏரி சீரமைத்தல், சமூதாயம் நலக்கூடம், பொதுக் கழிப்பறை, பூங்கா உள்ளிட்ட ஏராளமான நல திட்டங்களை அமைத்து தந்துள்ளது.
அந்த வகையில், அப்பகுதியினரின் தேவைக்காக, மிக குறைந்த வாடகைக்கு சுப நிகழ்ச்சிகள் நடத்தும் வகையில், தனியார் சி.எஸ்.ஆர்., நிதியின் கீழ், 2014 - 15 நிதி ஆண்டில், 60 லட்சம் ரூபாய் மதிப்பில் இங்கு சமூதாயம் நலக்கூடம் கட்டித் தரப்பட்டது.
இந்த நிலையில், தற்போது பராமரிப்பு இல்லாததால், இரும்பு கதவு, ஜன்னல் உள்ளிட்டவை துருபிடித்து உள்ளது. மேலும், இக் கட்டடடத்தின் ஒரு பகுதியில் அங்கன் வாடி மையம் இயங்குவதால், பொதுக்கள் பயன்படுத்த முடியவில்லை.
இதனால், அதிக தொகை கொடுத்து, தனியார் திருமண மண்டபத்தில் நிகழ்ச்சிகள் நடத்த வேண்டி உள்ளது. அதே போல, அதன் அருகில், கட்டப்பட்ட பொது கழிப்பறையும் உபயோகம் இல்லாமல் வீணாகி வருகிறது.
ஊராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால், மக்களின் நலனுக்காக தனியார் நிறுவனங்கள் கட்டி கொடுக்கும் கட்டடங்கள் வீணாகி வருவதாக பொதுக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
எனவே, சுப நிகழ்ச்சிகளை நடத்தும் வகையில், சமூதாய நலக்கூடத்தை பராமரித்து செயல்படுத்த வேண்டும் என, அப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.