/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தடுப்பின்றி ஏகனாபுரம் தரைப்பாலம்
/
தடுப்பின்றி ஏகனாபுரம் தரைப்பாலம்
ADDED : ஜூலை 15, 2024 02:47 AM

ஏகனாபுரம்:பள்ளூர் - சோகண்டி வரையில், மாநில நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில், 24 கி.மீ., துாரம் ஒருவழிச் சாலை இருந்தது. இச்சாலையில், வாகனப் போக்குவரத்து அதிகரித்து இருப்பதால், மேம்படுத்தப்பட்ட இருவழிச் சாலையாக, விரிவுப்படுத்தும் பணி, 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் துவங்கியது.
ஏழு மீட்டர் சாலையில் இருந்து, 10.5 மீட்டராக மேம்படுத்தப்பட்ட இருவழிச் சாலைக்கு, 44 கோடி ரூபாய் செலவில், சாலை விரிவுபடுத்தும் பணி நிறைவு பெற்று, போக்குவரத்து பயன்பாட்டில் உள்ளது.
இந்த சாலை வளைவுகள், வேகத்தடை, கிராமத்தின் பெயர்கள் வாகன ஓட்டிகளுக்கு தெரியும் வகையில், இரவில் ஒளிரும் எச்சரிக்கை பலகைகளை பொருத்தினர்.இந்த சாலை முறையாக பராமரிப்பு இல்லாததால், சீமைக் கருவேல மரங்கள் புதர் மண்டிக் கிடக்கிறது. மேலும், பிரதான தரைப்பாலங்கள் ஓரம் தடுப்பு இன்றி காணப்படுகிறது.
குறிப்பாக, கம்பன் கால்வாயில் இருந்து ஏகனாபுரம் கிராம ஏரிக்கு செல்லும் நீர்வரத்துக் கால்வாய் தரைப்பாலத்தின் இருபுறமும் தடுப்பு இல்லை. இதனால், பள்ளூர் - சோகண்டி வரையில் செல்லும் வாகனங்கள் நிலை தடுமாறி கவிழும் அபாயம் உள்ளது.
எனவே, பள்ளூர் - சோண்டி சாலையில், ஏகனாபுரத்தில் தரைப்பாலத்தின் ஓரம் தடுப்பு ஏற்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.