/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பழையசீவரம் பாலாற்று தடுப்பணை வறட்சி மணலை அகற்ற விவசாயிகள் எதிர்பார்ப்பு
/
பழையசீவரம் பாலாற்று தடுப்பணை வறட்சி மணலை அகற்ற விவசாயிகள் எதிர்பார்ப்பு
பழையசீவரம் பாலாற்று தடுப்பணை வறட்சி மணலை அகற்ற விவசாயிகள் எதிர்பார்ப்பு
பழையசீவரம் பாலாற்று தடுப்பணை வறட்சி மணலை அகற்ற விவசாயிகள் எதிர்பார்ப்பு
ADDED : ஏப் 11, 2024 11:13 PM

வாலாஜாபாத்:வாலாஜாபாத் அடுத்த, திருமுக்கூடல் அருகே பாலாறு, செய்யாறு, வேகவதி ஆகிய மூன்று ஆறுகள் சங்கமிக்கின்றன. பாலாற்றின் மூலம் திருமுக்கூடல், பினாயூர் பழையசீவரம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களின் குடிநீர் தேவை பூர்த்தியாவதோடு விவசாய நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன. இதனால், இப்பகுதி பாலாற்று படுகையை மையமாகக் கொண்டு தடுப்பணை கட்டி, பாலாற்றின் நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்கச் செய்ய சுற்றுவட்டார கிராம விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.
அக்கோரிக்கையை ஏற்று, 2020ல், பழையசீவரம் - பழவேரி பாலாற்றின் குறுக்கே, நபார்டு திட்டத்தின் கீழ், 42 கோடி ரூபாய் செலவில் நீர்வளத் துறை சார்பில் புதிய தடுப்பணை கட்டப்பட்டது.
இந்த தடுப்பணையின் வலது மற்றும் இடது புறங்களில் மதகுடன் கூடிய ஷட்டர் மற்றும் துணை பாசனக் கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக இந்த தடுப்பணையில் தண்ணீர் நிரம்பினால் பினாயூர், அரும்புலியூர், உள்ளாவூர், பாலுார் உள்ளிட்ட ஏரிகளுக்கு பாசன கால்வாய் வழியாக தண்ணீர் செல்ல வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இத்தடுப்பணை கட்டியதை தொடர்ந்து, மூன்று ஆண்டுகளாக பருவ மழைக் காலத்தின்போது தடுப்பணை நிரம்பி வழிகிறது. அச்சமயங்களில் பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், தண்ணீரோடு மணல் அடித்து வந்து தடுப்பணையின் பள்ளமான ஆழப் பகுதிகள் மூடப்பட்டு, தற்போது அணை உயரத்திற்கு மணல் சேர்ந்து மேடு போல உள்ளது.
இதனால், பருவ மழைக் காலம் மட்டுமின்றி, கோடைக்கால மழை, தென்மேற்கு பருவ கால மழை போன்ற மழை நேரங்களிலும் ஆற்றில் நீர்வரத்து இல்லாமலே இத்தடுப்பணை நிரம்பி விடுகிறது.
விவசாயம் பாதிப்பு
ஆறு அடி உயரத்திற்கு கட்டப்பட்ட பாலாற்று தடுப்பணை, தற்போது ஒரு அடி உயர ஆழம் கூட இல்லாமல் மணல் மூடி உள்ளதால், சிறு மழைக்கே அணை நிரம்பி விடுவதாக இப்பகுதி விவசாயிகள் பலரும் புலம்புகின்றனர்.
இதனால், இப்பகுதியில் தடுப்பணை இருந்தும், பாலாற்றின் நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்க வாய்ப்பின்றி, விவசாயத்திற்கு பயன் அளிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மண்டல நீர்வளத் துறை பொறியாளர் மார்க்கண்டேயன் கூறியதாவது:
பழையசீவரம் பாலாற்று தடுப்பணையில் பள்ளமான பகுதிகளை மணல் மூடி உள்ளது. இதனால், விரைவாக அணை நிரம்பி விடுகிறது. இத்தடுப்பணையில் குவிந்துள்ள மணலை நீர்வளத் துறை சார்பில் அப்புறப்படுத்த திட்டம் உள்ளது.
இதுகுறித்த அறிக்கை அனுப்பப்பட்டு அரசு பரிசீலனையில் உள்ளது. மணலை வெளியேற்றுவதா அல்லது கரையின் இருபுறமும் ஒதுக்குவதா என, ஆலோசிக்கப்பட்டு வருகிறது. லோக்சபா தேர்தல் முடிந்ததும் இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

