/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
போக்குவரத்து துறை அதிகாரிகள் உத்தரவிட்டும் கூழமந்தலில் நிற்காத அரசு பேருந்துகள்
/
போக்குவரத்து துறை அதிகாரிகள் உத்தரவிட்டும் கூழமந்தலில் நிற்காத அரசு பேருந்துகள்
போக்குவரத்து துறை அதிகாரிகள் உத்தரவிட்டும் கூழமந்தலில் நிற்காத அரசு பேருந்துகள்
போக்குவரத்து துறை அதிகாரிகள் உத்தரவிட்டும் கூழமந்தலில் நிற்காத அரசு பேருந்துகள்
ADDED : ஜூன் 24, 2024 05:19 AM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் - வந்தவாசி நெடுஞ்சாலையில் உள்ள கூழமந்தல் கிராமத்தில், 2,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இவ்வூரில், முதலாம் ராஜேந்திர சோழன் காலத்தில் கட்டப்பட்ட பேசும்பெருமாள் கோவில், கங்கைகொண்ட சோழீஸ்வரர் கோவில், 27 நட்சத்திர விருட்ச விநாயகர் உள்ளிட்ட பிரசித்தி பெற்ற கோவில்கள் உள்ளன.
இக்கோவில்களில் சுவாமி தரிசனம் செய்ய வெளிமாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
கூழமந்தல் அருகே உள்ள செய்யாறு சிப்காட் தொழிற்பேட்டையில் பணிபுரியும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் கூழமந்தலில் தங்கி வேலைக்கு சென்று வருகின்றனர்.
கிராமத்தினர் புகார்
இந்நிலையில், காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் இயக்கப்படும் அரசு பேருந்துகள், கூழமந்தல் பேருந்து நிறுத்தத்தில் நின்று செல்வதில்லை என, கிராமத்தினர் புகார் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து, கூழமந்தல்கிராமத்தினர் கூறியதாவது:
காஞ்சிபுரம் மண்டல பேருந்துகள் 202, 212 பி, திருவண்ணாமலை மண்டல பேருந்துகள் 422, 437, 203, விழுப்புரம் மண்டல பேருந்துகள் 203, 202, கடலுார் மண்டல பேருந்துகள் 303, 304, கும்பகோணம் மண்டல பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து அரசு பேருந்துகளும் கூழமந்தல் பேருந்து நிறுத்தத்தில் நின்று செல்ல, அனைத்து மண்டல போக்குவரத்துக் கழக பொது மேலாளர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
ஆனால், இத்தடத்தில் இயக்கப்படும் அரசு பேருந்துகள் கூழமந்தல் கிராமத்தில் முறையாக நிறுத்தி பயணியரை ஏற்றி, இறக்குவதில்லை.
இது தொடர்பாக, விழுப்புரம் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் மற்றும் கும்பகோணம் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் ஆகியோருக்கு புகார் தெரிவித்துள்ளோம்.
இருப்பினும் அரசு பேருந்துகள் கூழமந்தலில் நின்று செல்வதில்லை. கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்கள் மட்டுமின்றி, கூழமந்தல் மற்றும் சுற்றியுள்ள கிராமத்தினர், பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ- - மாணவியர் தனியார் பேருந்தில் கூடுதல் பணம் செலவழித்து பயணிக்க வேண்டியுள்ளது.
இதனால், அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
வலியுறுத்தல்
எனவே, கூழமந்தல் பேருந்து நிறுத்தத்தில் அனைத்து பேருந்துகளும் நின்று செல்ல, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கூழமந்தல் கிராமத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
இது குறித்து அரசு போக்குவரத்துக் கழகம், விழுப்புரம் கோட்டம், காஞ்சிபுரம் மண்டல அதிகாரி ஒருவர் கூறுகையில், 'காஞ்சிபுரம் மண்டலத்தில் இருந்து காஞ்சிபுரம் - வந்தவாசி தடத்தில் இயக்கப்படும் அனைத்து அரசு பேருந்துகளும், கூழமந்தலில் நின்று செல்ல சம்பந்தப்பட்ட ஓட்டுனர்கள், நடத்துனர்களுக்கு அறிவுறுத்தப்படும்' என்றார்.