/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தீயணைப்பு நிலையம் துவங்க வலியுறுத்தல்
/
தீயணைப்பு நிலையம் துவங்க வலியுறுத்தல்
ADDED : மார் 12, 2025 09:19 PM
வாலாஜாபாத்:வாலாஜாபாதை சுற்றிலும், நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இதில், குறிப்பிட்ட சில கிராமங்களில் தனியார் தொழிற்சாலைகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
வாலாஜாபாத் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டடங்கள் உள்ளன. சங்கராபுரம், லிங்காபுரம், சின்னிவாக்கம், குண்ணவாக்கம் போன்ற பகுதிகளில், தனியார் கல் குவாரிகளும் இயங்குகின்றன.
இது தவிர, பல கிராமங்களில், குடிசை வீடுகளும் உள்ளன. தொழிற்சாலைகளில் அவ்வப்போது மின் கசிவு மற்றும் பல இயற்கை சீற்றங்களால், தீ விபத்து மற்றும் பிற அசம்பாவித சம்பவங்கள் நடக்கின்றன.
கடந்த ஆண்டு நத்தாநல்லூர் கிராமத்தில் இயங்கும் தனியார் தொழிற்சாலையிலும், அதற்கு முன், தேவரியம்பாக்கம், காஸ் சிலிண்டர் கிடங்கிலும் பெரிய அளவிலான தீ விபத்துகள் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற நேரங்களில், காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதுார், செங்கல்பட்டு ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து, தீயணைக்கும் வாகனங்கள் வர வைக்கப்படுகின்றன.
ஆனால் தூரம் காரணமாக தீயணைப்பு வாகனம் மற்றும் வீரர்கள் வருவதற்குள், தீ வேகமாக பரவி, முழுதும் நாசமாகிறது. கிராமப் பகுதிகளில், மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகள், விவசாய கிணறுகள் மற்றும் ஏரி, குளம் போன்ற நீர் நிலைகளில் விழுந்து விபத்திற்குள்ளாகும் போது, தீயணைப்பு நிலைய உதவியை நாடியும் மீட்பு பணிக்கு உடனடியாக வர முடிவதில்லை.
எனவே, வாலாஜாபாத் பகுதியில், புதிதாக தீயணைப்பு நிலையம் துவக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதியினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.