/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கோவூர் சுந்தரேஸ்வரர் கோவிலில் மார்ச் 9ல் புதிய தேர் வெள்ளோட்டம்
/
கோவூர் சுந்தரேஸ்வரர் கோவிலில் மார்ச் 9ல் புதிய தேர் வெள்ளோட்டம்
கோவூர் சுந்தரேஸ்வரர் கோவிலில் மார்ச் 9ல் புதிய தேர் வெள்ளோட்டம்
கோவூர் சுந்தரேஸ்வரர் கோவிலில் மார்ச் 9ல் புதிய தேர் வெள்ளோட்டம்
ADDED : மார் 05, 2025 01:12 AM

குன்றத்துார்:குன்றத்துார் அருகே கோவூரில் உள்ள சுந்தரேஸ்வரர் கோவிலில், 1984ம் ஆண்டுக்கு முன் வரை, வைகாசி விசாகம் விழா, 10 நாட்கள் நடக்கும். இதன் ஏழாம் நாளில், தேரோட்டம் இருக்கும்.
பல நுாற்றாண்டுகளாக மிகப் பெரிய விழாவாக நடந்த தேர் திருவிழா, 40 ஆண்டுகளுக்கு முன், தேர் பழுதடைந்த காரணத்தால் நிறுத்தப்பட்டது. அதன்பின், தேர் மக்கி மண்ணோடு மண்ணாகி வீணாகியது.
இதையடுத்து, புதிய தேர் அமைத்து, மீண்டும் வைகாசி விசாகம் திருவிழாவை, 10 நாட்கள் நடத்த வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தினர்.
இதையடுத்து, குன்றத்துாரை சேர்ந்த அமைச்சர் அன்பரசன், தமிழக சட்டசபையில் ஹிந்து சமய அறநிலையத் துறை மானிய கோரிக்கையின் போது, கோவூர் கோவில் தேர் குறித்து கோரிக்கை வைத்தார்.
அதன்படி, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, கோவூர் கோவிலுக்கு புதிய தேர் செய்யப்படும் என, அறிவித்தார்.
இதையடுத்து, கோவில் நிதி மற்றும் உபயதாரர்கள் நிதி என, மொத்தம் ஒரு கோடி ரூபாய் மதிப்பில், புதிய தேர் அமைக்கும் பணி, கடந்த 2023ல் துவங்கியது.
துாத்துக்குடியில் இருந்து கோவூருக்கு வேங்கை மரக்கட்டைகள் வரவழைக்கப்பட்டு, 42.5 அடி உயரம், 16 அடி அகலத்தில், ஐந்து அடுக்குகள் கொண்ட புதிய தேர் வடிவமைக்கப்பட்டது.
தேர் பணிகள் நிறைவுற்றதையடுத்து, வரும் 9ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 மணிக்கு, கோவூரில் தேர் வெள்ளோட்டம் நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.