/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சியில் பதவி உயர்வு கிடைக்காத ஊராட்சி செயலர்கள் புலம்பல்
/
காஞ்சியில் பதவி உயர்வு கிடைக்காத ஊராட்சி செயலர்கள் புலம்பல்
காஞ்சியில் பதவி உயர்வு கிடைக்காத ஊராட்சி செயலர்கள் புலம்பல்
காஞ்சியில் பதவி உயர்வு கிடைக்காத ஊராட்சி செயலர்கள் புலம்பல்
ADDED : பிப் 27, 2025 08:51 PM
வாலாஜாபாத்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஊரக வளர்ச்சிச் துறையின் கீழ், கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் ஊராட்சி செயலர்களுக்கு வழங்கவேண்டிய, 20 சதவீத பதவி உயர்வு குறித்து நடவடிக்கை மேற்கொள்ளாதது, சீனியாரிட்டி ஊராட்சி செயலர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
ஊரக வளர்ச்சித் துறையின் கீழ், கிராம ஊராட்சிகளில் பணி புரியும் ஊராட்சி செயலர்களை, 2013ம் ஆண்டுக்கு முன் வரை, அந்தந்த ஊராட்சி தலைவர்களே நியமனம் செய்தனர்.
அதன்பின் மாவட்ட நிர்வாகம் வாயிலாக ஊராட்சிகள் தோறும் தலா ஒரு ஊராட்சிக்கு ஒரு செயலர் என நியமிக்கப்பட்டு பணியாற்றுகின்றனர்.
இவர்கள், கிராம ஊராட்சிகளில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகளை கண்காணித்தல்,
வரி வசூல் செய்தல், வரவு -- செலவு கணக்குகளை பராமரித்தல், குடிநீர் ,சுகாதாரம், தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், ஊராட்சியில் இருந்து அரசுக்கு தேவையான புள்ளி விபரங்கள் சமர்ப்பித்தல், மாவட்ட நிர்வாகம் வாயிலாக கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்படும் திட்டங்களை கொண்டு சேர்த்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில்,காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர் குன்றத்துார் ஆகிய ஐந்து ஒன்றியங்களில் 274 ஊராட்சிகள் உள்ளன. இதில், குறிப்பிட்ட சில ஊராட்சிகளில் செயலர் இல்லாமல் காலி பணி இடம் உள்ளது.
அவ்வாறான ஊராட்சிகளில், அதன் அருகாமையிலான ஊராட்சியை சேர்ந்த செயலர், காலி பணியிட ஊராட்சியையும் சேர்த்து நிர்வாகிக்கும் நிலை இருந்து வருகிறது.
ஊரக வளர்ச்சித் துறையில் பணியிடங்களை நிரப்பும்போது, ஊராட்சி செயலர்களுக்கு 20 சதவீதம் பணியிடங்கள் ஒதுக்கப்படுகின்றன.
அதாவது 20 ஆண்டுகளுக்கு மேலாக ஊராட்சி செயலாளராக பணிபுரிந்து வருவோருக்கு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும்.
இதற்கான பணி மூப்பு பட்டியல், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் வளர்ச்சி அலுவலகத்தில் பராமரிக்கப்படுகிறது.
காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சிகளில் ஏராளமானோர் சீனியாரிட்டி செயலர்களாக உள்ளனர்.
எனினும், கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக ஊராட்சி செயலர்களுக்கான பதவி உயர்வு வழங்கப்படவில்லை என அவர்கள் புலம்புகின்றனர்.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி செயலர்கள் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
கடந்த ஆண்டில்,செங்கல்பட்டு மாவட்டத்தில் பணி மூப்பு பட்டியலை கொண்டு 8 ஊராட்சி செயலருக்கு இளநிலை உதவியாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், காஞ்சிபுரம் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டதன் பின் பதவி உயர்வு வழங்கப்படவில்லை.
எனவே, காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி செயலர்களுக்கு பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.