/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஓராண்டாக ஆண்டறிக்கை வெளியிடாத புள்ளியியல் துறை
/
ஓராண்டாக ஆண்டறிக்கை வெளியிடாத புள்ளியியல் துறை
ADDED : மே 06, 2024 05:01 AM
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்ட புள்ளியியல் துறை, ஒவ்வொரு ஆண்டும், அனைத்து துறைகளின் புள்ளி விபரங்களை ஆண்டறிக்கையாக தயாரித்து, மாவட்ட கலெக்டருக்கு சமர்ப்பிக்கும். பொதுமக்கள் பார்வைக்கும், மாவட்ட அரசு இணையதளத்திலும் வெளியிடப்படும்.
அவ்வாறு, ஒவ்வொரு துறை அதிகாரிகளிடம் அரசு திட்டங்களில் பயனாளிகள், பணியிடங்கள், காலியிடங்கள், கடன், தொழிற்சாலைகள், குற்ற வழக்குகள் எண்ணிக்கை, அரசுக்கு கிடைத்த வருவாய், வாகனங்கள் பதிவு என பல்வேறு தகவல்கள் புள்ளி விபரத்துடன் இருக்கும்.
இந்த ஆண்டறிக்கை வெளியிடுவதில், புள்ளியியல் துறை அலட்சியமாக செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது. 2021 - -22ம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையே, 2023 ஜனவரி மாதம் தான் வெளியிடப்பட்டது.
அதைத் தொடர்ந்து, 2022 - -23ம் ஆண்டுக்கான ஆண்டறிக்கை, ஒரு ஆண்டு கடந்த போதும், இதுவரை மாவட்ட அரசு இணையதளமான, kancheepuram.nic.inல் வெளியிடவில்லை.
ஆண்டறிக்கை தயாராகி விட்டதாகவும், சரி பார்க்கப்பட்டு வருவதாக, புள்ளியியல் துறை அதிகாரிகள் தெரிவித்து வந்தனர்.
ஆனால், ஒராண்டை கடந்த போதும் இதுவரை வெளியிடவில்லை. 2024- - 25ம் நிதியாண்டே துவங்கிய நிலையில், 2022- - 23ம் ஆண்டுக்கான ஆண்டறிக்கை எப்போது வெளியிடப்படும் என்ற கேள்வியை, காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் எழுப்புகின்றனர்.
வெளிப்படைத் தன்மையுடன் வெளியிட வேண்டிய இந்த அறிக்கையை வெளியிடாமல், புள்ளியியல் துறை அலட்சியமாக செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது.