/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கூலி தொழிலாளி கொலை வழக்கில் இருவர் கைது
/
கூலி தொழிலாளி கொலை வழக்கில் இருவர் கைது
ADDED : மார் 06, 2025 08:55 PM
உத்திரமேரூர்:உத்திரமேரூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட, கருவேப்பம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி, 47; கூலி தொழிலாளி. இவர், இரண்டு நாட்களுக்கு முன், வீட்டிலிருந்து வெளியே சென்றார். ஆனால், மீண்டும் வீடு திரும்பவில்லை.
இதையடுத்து, அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் அவரை தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தின இரவு கருவேப்பம்பூண்டி பகுதியில் உள்ள தனியார் விவசாய கிணற்றில், இறந்த நிலையில், ஆண் சடலம் கிடப்பதாக, உத்திரமேரூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
பின், சடலத்தை மீட்ட போலீசார் சம்பவம் குறித்து விசாரணை செய்தனர். அதில், இறந்து கிடந்தது காணாமல் போன பழனி என்பது தெரியவந்தது. தொடர்ந்து, போலீசார் விசாரணையில், ஒரு வாரத்திற்கு முன் பழனிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த அகத்தியன், 22; என்பவரின் தாய் மற்றும் சகோதரிகளோடு தகராறு ஏற்பட்டுள்ளது.
இதற்காக இரு தினங்களுக்கு முன் அகத்தியன் தன் நண்பன் சக்திவேலுடன், 22 சேர்ந்து பழனியை குடிக்க அழைத்து சென்று, கொலை செய்து உடலில் கல்லை கட்டி கிணற்றில் வீசியதாக தெரிய வந்தது.
இதையடுத்து, பழனியை கொலை செய்த வழக்கில், கருவேப்பம்பூண்டியைச் சேர்ந்த அகத்தியன் மற்றும் சக்திவேல் ஆகிய இருவரை உத்திரமேரூர் போலீசார் கைது செய்தனர்.