/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
செங்கை மீனவர்கள் ஓட்டு யாருக்கு சாதகம்?
/
செங்கை மீனவர்கள் ஓட்டு யாருக்கு சாதகம்?
ADDED : ஏப் 01, 2024 02:05 AM
மாமல்லபுரம்:காஞ்சிபுரம் - தனி லோக்சபா தொகுதிக்குட்பட்ட செங்கல்பட்டு மாவட்டத்தில், கானத்துார் ரெட்டிகுப்பம் துவங்கி, இடைக்கழிநாடு ஆலம்பரைகுப்பம் வரை, 36 மீனவர் பகுதிகள் உள்ளன.
வாழ்வாதாரத்திற்காக கடலில் மீன்பிடிக்கும் பாரம்பரிய மீனவர்கள், 7,500க்கும் மேல் வசிக்கின்றனர். கடலோர பகுதியாக உள்ள சட்டசபை, லோக்சபா ஆகிய தொகுதிகளில், மீனவர்களின் ஓட்டும் தேர்தல் வெற்றியை நிர்ணயிப்பதாக உள்ளது.
திரைப்பட நடிகரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆர்., மீனவ கதாபாத்திரத்தில் நடித்ததால், மீனவர்கள் அவர் துவக்கிய அ.தி.மு.க.,வை தொடர்ந்து ஆதரித்து வந்தனர். அக்கட்சியின் ஓட்டு வங்கியாக நீடித்தனர்.
நாளடைவில், அ.தி.மு.க., ஆதரவு நிலை படிப்படியாக குறைந்தது. 2016ல் நடந்த சட்டசபை தேர்தலில், திருப்போரூரில் மட்டுமே, அக்கட்சி குறைவான ஓட்டு வித்தியாசத்தில் வென்றது. செய்யூர், சோழிங்கநல்லுார் ஆகியவற்றில் தோல்வியுற்றது.
கடந்த 2019ல் நடந்த திருப்போரூர் இடைதேர்தலிலும், கூட்டணி பலத்திலும் தோல்வியுற்றது. அவர்களின் அ.தி.மு.க., மீதான ஆதரவு குறைவதே, தோல்விக்கு காரணம் என, அக்கட்சியினர் கருதுகின்றனர்.
தற்கால அரசியல் சூழலில், அவர்கள், அ.தி.மு.க., - தி.மு.க., - பா.ஜ., - நாம் தமிழர் என, பல கட்சிகளில் பரவலாக சார்ந்துள்ளனர்.
அவர்களின் பெரும்பான்மை ஓட்டுகள், எந்த கட்சி வேட்பாளருக்குசாதகமாகும் என்பதை அறிய, பிரதான அரசியல்கட்சியினர் ஆர்வம் காட்டுகின்றனர்.
அ.தி.மு.க., வேட்பாளர்ராஜசேகர், பிரசாரம் துவங்கும் முன், ஒவ்வொரு பகுதியிலும் மீனவ சபையினரை சந்தித்து, நீண்டகாலமாக தீர்க்கப்படாத கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.
இதுகுறித்து, மீனவர்கள் கூறியதாவது:
எம்.ஜி.ஆர்., திரைப்படத்தில் மீனவராக நடித்து, எங்கள் வாழ்க்கையை உணர்த்தினார். அவருக்காக அ.தி.மு.க.,வை ஆதரித்தோம். இன்றைய இளைஞர்கள், பல கட்சிகளை சார்ந்தவர்களாக உள்ளனர்.
இதனால், அ.தி.மு.க., ஆதரவு குறைந்துள்ளது உண்மை தான். அ.தி.மு.க., வேட்பாளர் தான் மீனவ கிராம ஊராட்சியிடம் ஆதரவு கேட்டுள்ளார். ஒருவருக்கே பெரும்பான்மையான ஓட்டுகள் கிடைக்கும் என கருத முடியாது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

