/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நிதி வரணும்; அட்ஜஸ் பண்ணிக்கோங்க... பாதாள சாக்கடையால் 100 சாலைகள் பாழ்!
/
நிதி வரணும்; அட்ஜஸ் பண்ணிக்கோங்க... பாதாள சாக்கடையால் 100 சாலைகள் பாழ்!
நிதி வரணும்; அட்ஜஸ் பண்ணிக்கோங்க... பாதாள சாக்கடையால் 100 சாலைகள் பாழ்!
நிதி வரணும்; அட்ஜஸ் பண்ணிக்கோங்க... பாதாள சாக்கடையால் 100 சாலைகள் பாழ்!
ADDED : ஆக 05, 2025 11:33 AM

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சியில், பாதாள சாக்கடை திட்டப்பணி நடந்து வரும் 100க்கும் மேற்பட்ட இடங்களில் சாலைகள், படுமோசமான நிலையில் உள்ளதால் வாகன ஓட்டிகள் திணறி வருகின்றனர்.
சாலையை சீரமைக்க வேண்டிய மாநகராட்சியோ, அரசின் நிதி வருவதற்காக காத்திருக்கிறது. அதுவரை சாலை சீரமைப்புக்காக மக்கள் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாநகராட்சியில் புதிதாக இணைந்த ஓரிக்கை, செவிலிமேடு, திருக்காலிமேடு பகுதிகளையும் சேர்த்து, 254 கோடி ரூபாயில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
சாலை படுமோசம் மாநகராட்சியின் 51 வார்டுகளில் முதற்கட்டமாக 11 வார்டுகளில் உள்ள, 100க்கும் மேற்பட்ட தெருக்களில், 180 கி.மீ., குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது. தெருக்களின் நடுவே பெரிய அளவில் பள்ளம் தோண்டப்பட்டு குழாய்கள் பதிக்கப்படுகின்றன.
அதன் பின் சாலையை சீரமைக்காததால், பெரிய பள்ளங்கள் ஏற்படுவதோடு, சேறும் சகதியுமாக சாலைகள் மாறியுள்ளன. சாலையின் நடுவே, 'மேன்ஹோல்' எனும் இயந்திர நுழைவு தொட்டிகள் அமையும் இடங்களிலும், சாலை படுமோசமாக மாறியுள்ளன.
பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும், 100க்கும் மேற்பட்ட சாலைகளிலும் இதே நிலைதான்.
பணிகள் துவக்கம் குண்டும், குழியுமான சாலைகளில் வாகன ஓட்டிகள் எளிதாக செல்ல முடியாமல், மழைக்காலத்தில் நடமாட முடியாமலும் நகர் மக்களும், வாகன ஓட்டிகளும் விபத்துகளிலும் சிக்குகின்றனர்.
அக்டோபரில் வட கிழக்கு பருவ மழை துவங்கும் என்பதால், அதற்கு முன் சாலையை உடனே சீரமைக்கும்படி அப்பகுதி மக்கள் கவுன்சிலர்களுக்கு நெருக்கடி கொடுக்கின்றனர். இந்த பிரச்னை, மாநகராட்சி கூட்டத்திலும் எதிரொலித்தது.
ஆனால், மாநகராட்சியோ அரசின் நிதி வருவதற்காக காத்திருக்கிறது. அதுவரை சாலை சீரமைப்புக்காக மக்கள் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சேதமடைந்த 100 சாலையை சீரமைக்க, நகராட்சி நிர்வாக துறை, முதற்கட்டமாக, 6.20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, ஒப்பந்ததாரர்கள் வாயிலாக, பணிகள் துவங்கியுள்ளன.
அடுத்த கட்டமாக அரசு ஒதுக்கும் நிதியை பொருத்து அனைத்து சாலைகளும் முழுமையாக சீரமைக்கப்படும் என, மாநகராட்சி தெரிவித்து உள்ளது.
நடவடிக்கை இதுகுறித்து மாநகராட்சி மேயர் மகாலட்சுமி கூறியதாவது:
காஞ்சிபுரம் மாநகராட்சியில், பாதாள சாக்கடை திட்ட பணி வேகமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஓரிக்கை, செவிலிமேடு போன்ற இடங்களில், பணி முழுமையாக முடிந்த இடங்களில், முன்னுரிமை அடிப்படையில் சாலை மீண்டும் அமைக்கப்படும்.
பாதாள சாக்கடை திட்டத்துடன் குடிநீர் பணிகளும் நடப்பதால், அவற்றுடன் சேர்த்து, புதிய சாலை விரைவாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.