/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் போல ஸ்ரீபெரும்புதுாரில் அமைகிறது புது பாலம் சந்திப்பு சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு
/
கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் போல ஸ்ரீபெரும்புதுாரில் அமைகிறது புது பாலம் சந்திப்பு சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு
கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் போல ஸ்ரீபெரும்புதுாரில் அமைகிறது புது பாலம் சந்திப்பு சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு
கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் போல ஸ்ரீபெரும்புதுாரில் அமைகிறது புது பாலம் சந்திப்பு சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு
ADDED : செப் 14, 2025 11:04 PM
காஞ்சிபுரம்:சென்னை எல்லை சாலை திட்டத்தில், ஸ்ரீபெரும்புதுாரில் கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தை போல, புதிய மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. இதன் மூலமாக, ஸ்ரீபெரும்புதுார் சந்திப்பு சாலையில் போக்குவரத்து நெரிசல் முற்றிலும் தவிர்க்கப்படும் என, சாலைகள் உட்கட்டமைப்பு மேம்பாட்டு கழகத்தினர் தெரிவித்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் இருந்து காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் வழியாக, செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் பூஞ்சேரி இடையே, 162 கி.மீ., துாரத்திற்கு சென்னை எல்லை சாலை திட்டத்தில், சாலை போடும் பணி நடந்து வருகிறது. இந்த சாலை போடும் பணிக்கு, 12,000 கோடி ரூபாய் அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
இதில், நில எடுப்பிற்கு 6,000 கோடி ரூபாய்; சாலை கட்டுமான பணிக்கு 4,500 கோடி ரூபாய் என, 12,000 கோடி ரூபாய்க்கு நிதி வகை பிரித்து பல்வேறு கட்டுமான சாலை போடும் பணிகள் நடந்து வருகின்றன.
இதில், திருவள்ளூர் மாவட்டம், தொடுகாடு முதல் ஸ்ரீபெரும்புதுார் வரையில், 8.7 கி.மீ., துாரம் சாலை போடும் பணிக்கு, 967 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் துவக்கப்பட்டுள்ளன.
ஆறுவழி சாலை, இருவழி சர்வீஸ் சாலை என, மொத்தம் 10 வழி சாலையாக போடப்பட உள்ளன. அதன்படி, 60 மீட்டர் அகலமும், 9.7 கி.மீ., துாரம் சாலையின் நீளமாக இருக்கும்.
சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், 450 கோடி ரூபாய் செலவில் மேம்பாலம் அமைய உள்ளது. இந்த மேம்பாலத்தில் நீளம், 2 கி.மீ., துாரத்திற்கு இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
இந்த மேம்பாலம் அமைந்தால், ஸ்ரீபெரும்புதுார் நகரில் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் வகையில் இருக்கும் என, நெடுஞ்சாலைத் துறை சிறப்பு திட்ட வல்லுனர்கள் தெரிவித்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுாரைச் சேர்ந்த வாகன ஓட்டிகள் சிலர் கூறியதாவது:
சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இருந்து, ஸ்ரீபெரும்புதுார் நகருக்குள் சென்று வருவதற்குள் போக்குவரத்து நெரிசல் அதிகமாக ஏற்படும்.
குறிப்பாக, காலை, மாலை நேரங்களில் வாகனங்களின் நகர்வு ஊர்ந்து செல்லும் சூழல் ஏற்படுகிறது. ஒரு வாகனம் ஸ்ரீபெரும்புதுாரை கடந்து செல்வதற்கு பல மணி நேரங்கள் கூட ஆகின்றன.
இதை தவிர்க்க, ஸ்ரீபெரும்புதுார் ரவுண்டானாவில் மேம்பாலம் அமைத்தல், வாகன ஓட்டிகள் எளிதாக கடந்து செல்ல வழி வகுக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து, தமிழ்நாடு சாலைகள் உட்கட்டமைப்பு மேம்பாட்டு கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தொடுகாடு முதல், ஸ்ரீபெரும்புதுார் வரையில், சாலை விரிவாக்க பணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதற்கு, 967 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, முறையாக டெண்டர் விடப்பட்டு பணிகள் துவக்கப்பட்டு உள்ளன. இந்த பணிகளை, 2028ம் ஆண்டிற்குள் நிறைவு செய்யப்பட உள்ளது.
குறிப்பாக, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை எளிதாக கடந்து செல்லும் வகையில், 2 கி.மீ., துாரத்திற்கு கத்திப்பாரா மேம்பாலம் போல, ஸ்ரீபெரும்புதுாரிலும் வெவ்வேறு இடங்களுக்கு பிரிந்து செல்லும் வகையில் மேம்பாலம் அமைய உள்ளது.
இந்த மேம்பாலத்தின் மாதிரி வடிவமைப்பு மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி உள்ளோம். ஒப்புதல் கிடைத்த பின் செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.