/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பாலாறு நீர் வரத்தால் நிரம்பிய அவளூர் ஏரி
/
பாலாறு நீர் வரத்தால் நிரம்பிய அவளூர் ஏரி
ADDED : டிச 04, 2025 04:33 AM

வாலாஜாபாத்: பாலாறு நீர் வரத்தால் அவளூர் ஏரிக்கு தொடர்ந்து தண்ணிர் வந்து நிரம்பி, உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
வாலாஜாபாத் அடுத்த அவளூரில் நீர்வளத் துறை கட்டுப்பாட்டின் கீழ், 110 ஏக்கர் பரப்பிலான ஏரி உள்ளது.
மழைக்காலத்தில் இந்த ஏரி முழுமையாக நிரம்பினால் அத்தண்ணீரைக் கொண்டு அப்பகுதியில் உள்ள 300 ஏக்கர் பரப்பிலான விவசாய நிலங்கள் பாசனம் பெறும்.
பெரியநத்தம் பாலாறில் இருந்து, அவளூர் ஏரிக்கு நான்கு கி.மீ., துாரத்திலான நீர்வரத்து கால்வாய் உள்ளது.
பாலாறில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் சமயங்களில் இக்கால்வாய் மூலம் சென்றடையும் தண்ணீர், அவளூர் மற்றும் தம்மனுார், நெய்க்குப்பம் ஆகிய ஏரிகள் நிரம்ப முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது.
இந்நிலையில், சில ஆண்டுகளாக அவளூர் ஏரிக்கான பாலாறு கால்வாய் முறையான பராமரிப்பின்மை காரணமாக துார்ந்து செடி, கொடிகள் வளர்ந்து இருந்தது.
இதனால், பாலாறு தண்ணீர் அவளூர் ஏரிக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, அவளூர் ஏரி பாலாறு கால்வாயை பருவ மழைக்கு முன்னதாக துார்வாரி சீரமைக்க அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.
அதன் தொடர்ச்சியாக, காஞ்சிபுரம் நீர்வளத்துறை சார்பில், அவளூர் ஏரி பாலாற்று நீர்வரத்துக் கால்வாய் துார்வாரி சீரமைக்கப்பட்டது.
இந்நிலையில், கனமழை காரணமாக பாலாற்று கால்வாய் மூலம் அவளூர் ஏரிக்கு தொடர்ந்து தண்ணீர் வந்தடைந்து, நேற்று நிரம்பி வழிந்தது.

