/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
'கனவு இல்லம்' திட்டத்தில் எகிறும் பட்ஜெட்...கூடுதல் செலவு!:கட்டுமான பொருட்களை எடுத்து செல்ல ரூ.18,000
/
'கனவு இல்லம்' திட்டத்தில் எகிறும் பட்ஜெட்...கூடுதல் செலவு!:கட்டுமான பொருட்களை எடுத்து செல்ல ரூ.18,000
'கனவு இல்லம்' திட்டத்தில் எகிறும் பட்ஜெட்...கூடுதல் செலவு!:கட்டுமான பொருட்களை எடுத்து செல்ல ரூ.18,000
'கனவு இல்லம்' திட்டத்தில் எகிறும் பட்ஜெட்...கூடுதல் செலவு!:கட்டுமான பொருட்களை எடுத்து செல்ல ரூ.18,000
UPDATED : நவ 27, 2024 12:15 AM
ADDED : நவ 26, 2024 07:19 PM

காஞ்சிபுரம்:'கலைஞரின் கனவு இல்லம்' திட்டத்தில், வீடு கட்டும் பயனாளிகளுக்கு, பி.டி.ஓ., அலுவலகங்களில் இருந்து வழங்கும் அரசு சிமென்ட், கம்பி போன்ற கட்டுமான பொருட்கைளை, 18,000 ரூபாய் செலவழித்து வீட்டிற்கு கொண்டு வர வேண்டியுள்ளது. கூலி ஆட்கள், வாகனங்கள்கூட இல்லாததால், பயனாளிகளுக்கு கூடுதல் செலவு ஏற்படுவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய ஐந்து ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இதில், 274 ஊராட்சிகளில், 1,354 குக்கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில், தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற பின், பசுமை வீடு வழங்கும் திட்டம் முடக்கப்பட்டு, கலைஞர் வீடு வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது. 2021 ல் ஊரக வளர்ச்சி துறையினர் கணக்கெடுப்பு நடத்தினர்.
அதேபோல, 2022ல், அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்திற்கு, குடிசை வீடுகளை கணக்கெடுப்பு நடத்தி முடித்துள்ளனர். இந்த கணக்கெடுப்பு வாயிலாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில், 17,653 வீடுகள் தேவைப்படும் என, புள்ளி விபரம் தெரிய வந்துள்ளது. கடந்த ஜூலை மாதம், கலைஞரின் கனவு இல்லம் கட்டும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில், 3,453 பயனாளிகளுக்கு, கலைஞர் கனவு திட்டத்தில் வீடு கட்டும் பணி ஆணையை, ஊரக வளர்ச்சி துறை வழங்கியுள்ளது. மீதமுள்ள, 14,200 பேரின் பெயர்கள் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு உள்ளது. அவர்களுக்கு அடுத்தகட்டமாக வீடுகள் வழங்கப்படும் என, ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கலைஞரின் கனவு இல்லம் கட்டும் திட்ட பயனாளிகளுக்கு, நான்கு விதமான மாதிரி வீடுகளில், ஏதேனும் ஒரு திட்டத்தின் படி வீடு கட்ட அரசு அனுமதி அளித்துள்ளது. வீடு கட்டும் பயனாளிக்கு, 3.50 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு கிடைக்கும்.
மேலும், வீடு கட்டும் ஆணை நகல் வழங்கினால், கூட்டுறவு துறையில், 1 லட்ச ரூபாய் வங்கி கடனுதவி வழங்கப்படும். மேலும், மகளிர் குழுவில் உறுப்பினராக இருந்தால், 50 ரூபாய் கூடுதல் கடனுதவி வழங்கப்படும் என, ஊரக வளர்ச்சி துறையில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதேபோல, வீடு கட்டும் பயனாளி ஒருவருக்கு, 140 சிமென்ட் மூட்டைகள்; 320 கிலோ கம்பி என, கட்டுமானப் பொருட்கள் அரசு வழங்குகிறது. இவை, பயனாளிகளுக்கு வழங்கும் பில் பணத்தில் கழிக்கப்படுகிறது. ஒரு மூட்டை சிமென்ட் விலை, 285 ரூபாய், ஒரு கிலோ கம்பிக்கு, 62 ரூபாய் என, கட்டுமானப் பொருட்களுக்கு 59,740 ரூபாய் பிடித்தம் செய்யப்படுகிறது.
வீடு கட்டும் பயனாளி ஒருவர், பி.டி.ஓ., அலுவலக கிடங்கில் இருந்து, கட்டுமான பொருட்களை, வீடு கட்டும் இடத்திற்கு எடுத்து செல்ல, கூடுதலாக 18,000 ரூபாய் வரை செலவிட வேண்டி உள்ளது. இதற்கு பதிலாக தனியாரில் கட்டுமானப் பொருட்களின் விலையை கணக்கிட்டு நிதி வழங்கினால் கட்டுமானப் பொருட்களை டோர் டெலிவரி கொடுத்து விட்டு செல்வார்கள் என, பயனாளிகள் புலம்புகின்றனர்.
இதுகுறித்து, கலைஞர் கனவு இல்ல திட்டத்தில், வீடு கட்டும் பயனாளி ஒருவர் கூறியதாவது:
அரசு வழங்கும் சிமென்ட் மூட்டை, கம்பி ஆகிய பொருட்களை, பி.டி.ஓ., அலுவலக கிடங்கில் இருந்து ஏற்றி வருவதற்கு மூட்டை துாக்கும் கூலி ஆட்கள், வாகன வாடகை ஆகிய செலவினங்களுக்கு கூடுதல் செலவாகிறது.
அதே விலைக்கு, தனியாரிடம் சிமென்ட், கம்பி ஆகிய பொருட்களை வாங்கும் போது, பொருட்களின் விலை மட்டுமே கடைக்காரரிடம் கொடுத்தால் போதும். கட்டுமானப் பொருட்களை வீட்டிற்கு எடுத்து வந்து இறக்கிவிட்டு செல்கின்றனர்.
இதனால், சிமென்ட், கம்பி வேண்டாம் என கூறுகிறோம். இதற்கு, அதிகாரிகள் உங்கள் கணக்கில் கொள்முதல் செய்துள்ளோம். கட்டாயமாக பொருட்களை எடுத்து செல்ல வேண்டும் என, நிர்பந்தம் செய்கின்றனர். வாகன செலவ, கூலி போன்றவற்றை கணக்கீடு செய்தால், தனியார் விற்பனை செய்யும் விலைக்கு நிகராக உள்ளது. இது எங்களுக்கு கூடுதலாக செலவாகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் இயங்கும் சிமென்ட் கிடங்குகளுக்கு, சுமை துாக்கும் தொழிலாளர்கள் நியமனம் இல்லை. இதனால், தனி நபர்கள் வாயிலாக, சிமென்ட், கம்பி ஆகிய பொருட்களை ஏற்ற வேண்டி உள்ளது. இதற்கு, தனி கூலியும் வழங்க வேண்டி உள்ளது. இது, பயனாளிகளுக்கு கூடுதல் செலவு தான். இது, அரசு பாலிசி, நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.