/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
உள்ளாட்சிகளில் இடைத்தேர்தல் நடத்தாமல்...இழுத்தடிப்பு!:3 ஊராட்சி தலைவர்; 8 வார்டு பதவிகள் காலி
/
உள்ளாட்சிகளில் இடைத்தேர்தல் நடத்தாமல்...இழுத்தடிப்பு!:3 ஊராட்சி தலைவர்; 8 வார்டு பதவிகள் காலி
உள்ளாட்சிகளில் இடைத்தேர்தல் நடத்தாமல்...இழுத்தடிப்பு!:3 ஊராட்சி தலைவர்; 8 வார்டு பதவிகள் காலி
உள்ளாட்சிகளில் இடைத்தேர்தல் நடத்தாமல்...இழுத்தடிப்பு!:3 ஊராட்சி தலைவர்; 8 வார்டு பதவிகள் காலி
ADDED : மே 07, 2024 09:30 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், காலியாக உள்ள 3 கிராம ஊராட்சி தலைவர், 8 வார்டு உறுப்பினர் பதவிக்கான இடங்களுக்கு, மாநில தேர்தல் கமிஷன் தேர்தல் நடத்தாமல், இழுத்தடித்து வருகிறது. இதனால், ஊராட்சிகளில் வளர்ச்சி பணிகளில் பாதிப்பு ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழகம் முழுதும், 2021ல் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்தது. புதியதாக பிரிக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு, அந்தாண்டு அக்டோபர் மாதம் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, அக்டோபர் மாதம் 6ம் தேதி முதற்கட்டமாகவும், 9ல் இரண்டாம் கட்டமாகவும் தேர்தல் நடந்து முடிந்தன.
பிரதிநிதிகள் தேர்வு
காஞ்சிபுரம் மாவட்டத்தில், 5 ஒன்றியங்களில், 11 மாவட்ட கவுன்சிலர்கள்; 98 ஒன்றிய கவுன்சிலர்கள், 273 ஊராட்சி தலைவர்கள்; 1,938 வார்டு உறுப்பினர்கள் தேர்தலில் வெற்றி பெற்று பதவி ஏற்றுக் கொண்டனர்.
அதேபோல, 2022ல், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்தது. பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிக்கான தேர்தல் நடத்தப்பட்டு பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
ஊரக உள்ளாட்சி தேர்தல் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஆகிய தேர்தல்களில் வெற்றி பெற்ற பிரதிநிதிகள், பதவியேற்றுக் கொண்டு பணியாற்றி வருகின்றனர்.
தேர்தல் முடிந்து இரு ஆண்டுகளுக்கு மேல் கடந்த நிலையில், மாவட்டத்தின் பல்வேறு ஊராட்சிகளில் காலியாக உள்ள ஊராட்சி தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் பதவி இடங்களுக்கு தற்போது வரை இடைத்தேர்தல் நடத்தாமல், மாநில தேர்தல் கமிஷன் மெத்தனமாக இருந்து வருகிறது.
இருவர் வெட்டிக்கொலை
பதவியேற்ற மக்கள் பிரதிநிதிகளில் சிலர் வயது மூப்பு, உடல் நிலை சரியில்லாத காரணம், கொலை போன்ற காரணங்களால இறந்துள்ளனர். சிலர், பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
அவ்வாறு காலியான மக்கள் பிரதிநிதிகளின் பதவி இடங்களுக்கு, ஆறு மாதங்களில் தமிழ்நாடு மாநில தேர்தல் கமிஷன் தேர்தல் நடத்த வேண்டும். ஆனால், தேர்தல் நடத்தாமல், ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக இழுத்தடித்து வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், மூன்று ஊராட்சி தலைவர்கள் பதவி இடங்கள் காலியாக உள்ளன. இதில், இருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல, ஊராட்சிகளில் உள்ள வார்டு உறுப்பினர்களில், எட்டு பதவி இடங்கள் இன்னமும் காலியாக உள்ளன. இந்த பதவி இடங்களுக்கு எப்போது தேர்தல் நடத்தப்படும் என, கிராமத்தினர் எதிர்பார்த்துள்ளனர்.
கோரிக்கை
ஊராட்சி தலைவர் பதவியிடம் காலியான பின், துணை தலைவருக்கு அப்பதவிக்கான அதிகாரம் தற்காலிகமாக வழங்கப்படுள்ளது. அதேபோல, காலியாக இருக்கும் வார்டு உறுப்பினர் பதவிக்கான பணிகளை, அந்தந்த ஊராட்சி நிர்வாகம் பார்க்க வேண்டியுள்ளது.
இந்த தற்காலிக நடவடிக்கை, ஊராட்சி நிர்வாகத்தில் முழுமையான தீர்வாக இல்லை. காலி பதவி இடங்கள் உள்ள ஊராட்சிகளில், பல்வேறு குழப்பங்கள் நீடிக்கிறது.
கிராம மக்களின் தேவைகளை அறிந்து, ஊராட்சி மன்றத்திடம் கேட்டு பெறவும், மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுக்கவும் ஊராட்சி தலைவர்கள், வார்டு உறுப்பினர்களின் பதவிகள் பூர்த்தி செய்ய வேண்டும்.
ஊராட்சிகளின் நிர்வாக நலனுக்காக, ஆறு மாதங்களுக்குள் நடத்த வேண்டிய தேர்தல் இழுத்தடிப்பதால், விரைந்து தேர்தல் நடத்த வேண்டும் என, கிராமத்தினர் கோரிக்கை விடுக்கின்றனர்.
உத்தரவு வரவில்லை
இதுகுறித்து ஊரக வளர்ச்சித் துறையின் கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஸ்ரீதரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது
ஏற்கனவே காலியாக இருந்த ஊராட்சி துணைத் தலைவர்களுக்கான தேர்தல் நடத்தப்பட்டுவிட்டன. ஊராட்சி தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கான தேர்தல் விரைவில் நடத்தப்படும்.
இப்போது, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. தேர்தல் நடத்துவது சம்பந்தமான எந்தவித அறிவிப்பும், உத்தரவும் எங்களுக்கு இதுவரை வரவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

