ADDED : நவ 30, 2024 07:46 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் காரப்பேட்டையில் உள்ள அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனையில், புற்றுநோய் தொடர் மருத்துவ கல்வியின் 11வது கருத்தரங்கம் நேற்று நடந்தது.
திருப்பதி டாடா குழுமத்தின் வெங்கடேஸ்வரா புற்றுநோய் மருத்துவ நிலையத்தின் மருத்துவ இயக்குனர் மருத்துவர் பிரசாந்த் பெனுமாடு , ‛புற்று நோய் அறுவை சிகிச்சையில், உடன் ஒளிர்வு- வழிகாட்டியின் நவீன பங்களிப்பு' என்ற தலைப்பில் கருத்தரங்க உரை நிகழ்த்தினார்.
கருத்தரங்கிற்கு தலைமை வகித்த செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லுாரியின் புதிய முதல்வர் பேராசிரியர் டாக்டர் ஜி.சிவசங்கரன், இம்மருத்துவமனையின் ஓய்வு பெற்ற மூத்த மருத்துவர் ஜீவானந்தம் ஆகியோருக்கு காஞ்சிபுரம் இந்திய மருத்துவ சங்க தலைவர் டாக்டர் மனோகரன் நினைவுப்பரிசு வழங்கி கவுரவித்தார்.
அண்ணா புற்றுநோய் மருத்துவமனையில் உள்ள நவீன அறுவை சிகிச்சை முறைகள் தொடர்பான அறிக்கையை டாக்டர்கள் பிரசன்ன சீனிவாச ராவ், புற்றுநோயியல் உயர் கல்வி மாணவர் டாக்டர் டோரியன் ஆகியோர் சமர்ப்பித்தனர். நிலைய மருத்துவ அதிகாரி டாக்டர் சிவகாமி நன்றி கூறினார்.