/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பராமரிப்பின்றி வீணாகும் சிறுவர் விளையாட்டு பூங்கா
/
பராமரிப்பின்றி வீணாகும் சிறுவர் விளையாட்டு பூங்கா
ADDED : செப் 23, 2025 12:30 AM

வாலாஜாபாத்:வாலாஜாபாத், சின்ன சாமி நகரில் பராமரிப்பின்றி வீணாகும் சிறுவர் விளையாட்டு பூங்காவை, சீரமைத்து தர அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாலாஜாபாத் பேரூராட்சி, 2வது வார்டு, சின்னசாமி நகரில், பல ஆண்டுகளுக்கு முன் பூங்கா அமைக்கப்பட்டது. இதில், சறுக்கல், ஊஞ்சல், ஏணி உள்ளிட்ட சிறுவர் விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன.
கடந்த நாட்களில் இந்த பூங்காவில் அப்பகுதியினர் பொழுதுபோக்கு மற்றும் நடைபயிற்சிகளில் ஈடுபட்டனர். இந்நிலையில், சமீப காலமாக பூங்கா முறையான பராமரிப்பு இல்லாததால் பல வகையான செடிகள் வளர்ந்து உள்ளன.
கால்நடைகள் பூங்காவில் நடமாடுவதால் மாடு முட்டும் என, சிறுவர்கள் உள்ளே செல்ல அச்சப்படும் நிலை உள்ளது.
சில நேரங்களில் காதல் ஜோடிகளின் இருப்பிடமாகவும் இரவு நேரங்களில் மது பிரியர்களின் கூடாரமாகவும் பூங்கா மாறி வருகிறது.
எனவே, இப்பூங்காவில் வளர்ந்துள்ள செடிகளை அகற்றி, போதிய பாதுகாப்பு வசதி ஏற்படுத்தி பராமரிக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.