/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பறிமுதல் போதை பொருட்கள் தீயிலிட்டு அழிப்பு
/
பறிமுதல் போதை பொருட்கள் தீயிலிட்டு அழிப்பு
ADDED : பிப் 07, 2026 06:15 AM

சிங்கபெருமாள் கோவில்: சிங்கபெருமாள் கோவில் அருகே தென்மேல்பாக்கத்தில், வடக்கு மண்டல காவல் துறை சார்பில், பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பொருட்கள் தீயிட்டு அழிக்கப்பட்டன.
சிங்கபெருமாள் கோவில் அடுத்த தென்மேல்பாக்கம் கிராமத்தில், மருத்துவக் கழிவுகள் எரியூட்டும் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
சென்னை பெருநகர காவல் நிலையம், தாம்பரம், ஆவடி மாநகர காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் பறிமுதல் செய்யப்படும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள், நீதிமன்ற உத்தரவுக்குப் பின், இங்கு கொண்டு வந்து எரித்து அழிக்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில், வடக்கு மண்டல காவல் துறை எல்லைக்கு உட்பட்ட செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலுார், ராணிப்பேட்டை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இருந்து 668 கஞ்சா வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 1,925 கிலோ கஞ்சா பொருட்கள், நேற்று காலை இங்கு கொண்டு வரப்பட்டன.
விழுப்புரம் மண்டல டி.ஐ.ஜி., அருளரசு, வேலுார் மண்டல டி.ஐ.ஜி., தர்மராஜ், காஞ்சிபுரம் மண்டல டி.ஐ.ஜி.செஷாந்த் சாய் ஆகிய மூன்று அதிகாரிகள் முன்னிலையில் கஞ்சா பொருட்களின் எடை சரிபார்க்கப்பட்டு, தீயிலிட்டு அழிக்கப்பட்டன.
இதில், செங்கல்பட்டு மாவட்ட காவல் துறை முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர்.
அழிக்கப்பட்ட கஞ்சா பொருட்களின் மதிப்பு, 2 கோடி ரூபாய் இருக்கும் என, போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

