/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
இடநெருக்கடியில் இயங்கும் அஞ்சலகம் காஞ்சியில் வாடிக்கையாளர்கள் அவதி
/
இடநெருக்கடியில் இயங்கும் அஞ்சலகம் காஞ்சியில் வாடிக்கையாளர்கள் அவதி
இடநெருக்கடியில் இயங்கும் அஞ்சலகம் காஞ்சியில் வாடிக்கையாளர்கள் அவதி
இடநெருக்கடியில் இயங்கும் அஞ்சலகம் காஞ்சியில் வாடிக்கையாளர்கள் அவதி
ADDED : மார் 05, 2024 04:03 AM

காஞ்சிபுரம், : காஞ்சிபுரம் எஸ்.வி.என்., பிள்ளை தெருவில், பெரிய காஞ்சிபுரம் துணை அஞ்சலகம் இயங்கி வருகிறது. இங்கு தபால் தலை, மணியார்டர், விரைவு தபால், பதிவு அஞ்சல் உள்ளிட்ட தபால் சேவை மட்டுமின்றி சிறுசேமிப்பு, நீண்டகால மற்றும் குறுகிய கால வைப்புத்தொகை, பல்வேறு ஆயுள் காப்பீடு திட்டம் உள்ளிட்டவை செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இங்கு ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் பல்வேறு கணக்கு துவக்கியுள்ளனர். தினமும் நுாற்றுக்கணக்கான வாடிக்கையாளர்கள் அஞ்சலகத்திற்கு வந்து செல்கின்றனர். ஆனால், வாடிக்கையாளரின் வசதிக்கேற்ப அலுவலகத்தில் இடவசதி இல்லை.
விண்ணப்பம் பூர்த்தி செய்ய வரும் வாடிக்கையாளர்கள், அஞ்சலகத்தின் பக்கத்து வீட்டின் திண்ணையில் அமர்ந்து பூர்த்தி செய்ய வேண்டிய அவல நிலை உள்ளது.
இங்குள்ள இரு கவுன்டர்அறையும் குறுகலான இடத்தில் உள்ளதால், வரிசையில் இருவர் மட்டுமே நிற்கும் நிலை உள்ளது.
இதனால், ஆண்களும், பெண்களும் இட நெருக்கடியான இடத்தில், ஒருவரை ஒருவர் இடித்துக் கொண்டு நிற்க வேண்டிய அவல நிலை உள்ளதால், பெரிய காஞ்சிபுரம் அஞ்சலகத்திற்கு பெண்கள் வருவதற்கு தயக்கம் காட்டுகின்றனர்.
எனவே, வாடிக்கையாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப விசாலமான இடத்திற்கு பெரிய காஞ்சிபுரம் அஞ்சலகத்தை இடமாற்றம் செய்ய வேண்டும் என, வாடிக்கையாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து காஞ்சிபுரம் அஞ்சல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பெரிய காஞ்சிபுரம் பகுதியில், அஞ்சலகம் இயங்குவதற்கு ஏற்ற வகையில், விசாலமான இடம் உள்ள அலுவலகத்தை தேடி வருகிறோம். இடம் கிடைத்தவுடன் தற்போது இயங்கி வரும் அஞ்சலக அலுவலகம் இடமாற்றம் செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

