ADDED : ஏப் 21, 2025 01:24 AM

உத்திரமேரூர், :உத்திரமேரூர் -- மானாம்பதி நெடுஞ்சாலையில், ஆர்.என்.கண்டிகை கிராமம் உள்ளது. இங்குள்ள, ஆரோக்கியபுரம் பேருந்து நிறுத்தத்தில் பயணியர் நிழற்குடை உள்ளது.
இந்த பயணியர் நிழற்குடை, 30 ஆண்டுக்கு முன், உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தினால் அமைக்கப்பட்டது. இங்கு, உத்திரமேரூர், வந்தவாசி, காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் நின்று செல்கின்றன.
தற்போது, பயணியர் நிழற்குடை முறையாக பராமரிப்பு இல்லாமல் சேதமடைந்து உள்ளது. நிழற்குடையின் கூரையில் கான்கிரீட் பெயர்ந்து விழுந்து, இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன.
அந்த பகுதியில் பயணியர் பேருந்துக்காக காத்திருக்கும்போது, நிழற்குடை எந்த நேரத்திலும் இடிந்து விழுந்து உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, சேதமடைந்த பயணியர் நிழற்குடையை அகற்றி, புதிதாக நிழற்குடை அமைக்க துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

