/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சியில் செயல்படாத மீன் வளர்ச்சி கழகம்...அம்பலம்!: சட்டசபை குழு ஆய்வில் குட்டு வெளிப்பாடு
/
காஞ்சியில் செயல்படாத மீன் வளர்ச்சி கழகம்...அம்பலம்!: சட்டசபை குழு ஆய்வில் குட்டு வெளிப்பாடு
காஞ்சியில் செயல்படாத மீன் வளர்ச்சி கழகம்...அம்பலம்!: சட்டசபை குழு ஆய்வில் குட்டு வெளிப்பாடு
காஞ்சியில் செயல்படாத மீன் வளர்ச்சி கழகம்...அம்பலம்!: சட்டசபை குழு ஆய்வில் குட்டு வெளிப்பாடு
ADDED : செப் 22, 2024 02:07 AM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஐந்து ஆண்டுகளாக மீன் வளர்ச்சி கழகத்தில், எந்த ஒரு திட்டமும் செயல்படுத்தவில்லை என, விவசாயிகள் இடையே குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழ்நாடு சட்டசபை பொது நிறுவனங்கள் குழு தணிக்கை ஆய்வு அளித்ததில் குட்டு அம்பலமாகி உள்ளது.
காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய ஐந்து தாலுகா அலுவலகங்களின் கட்டுப்பாட்டில், 1.50 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் உள்ளன. இதில், 1.20 லட்சம் ஏக்கர் நிலங்களில், நெல் மற்றும் காய்கறி பயிர்களை விவசாயிகள் பயிரிட்டு வருகிறனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தை பொருத்தவரையில், விவசாயத்திற்கு அடுத்த படியாக ஆடு, மாடு, கோழி, மீன் ஆகிய கால்நடை வளர்ப்பு தொழில்கள் பிரதான தொழில்களாக உள்ளன.
கால்நடை துறை சார்பில், கோழி வளர்ப்பு, கொட்டகைக்கு மானியம் அரசு வழங்குகிறது. அதேபோல, ஆடு, மாடு வளர்ப்பிற்கு கணிசமான மானியம் அரசு வழங்கிறது.
இதில், மீன் வளர்ச்சி கழகம் சார்பில், எந்த ஒரு வளர்ச்சி திட்டங்களும் செயல்படுத்தவில்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கடந்த, 2019ம் ஆண்டு முதல், நடப்பு ஆண்டு, மார்ச் மாதம் வரையில், மீன் வளர்ச்சி கழகத்தில் எந்த ஒரு திட்டங்களும் செயல்படுத்தவில்லை என, சில தினங்களுக்கு முன் நடத்திய, தமிழ்நாடு சட்டசபை பொது நிறுவனங்களின் குழு தணிக்கை ஆய்வில் அம்பலமாகி உள்ளது.
குறிப்பாக, மீன் வளர்ச்சி கழகத்தின் கட்டுப்பாட்டில், புதிய நீர்த்தேக்கம், மீன் குஞ்சு உற்பத்தி நிலையங்கள், மீன் விற்பனை அங்காடிகள், மீன் வளர்ச்சி கழக கட்டுப்பாட்டில் டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விற்பனை நிலையங்கள் எதுவும் அமைக்கவில்லை என, காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் இடையே புலம்பல் ஏற்படுத்தி உள்ளது.
இதனால், விவசாயத்திற்கு மாற்றாக, மீன் வளர்ப்பு மற்றும் மீன் விற்பனை நிலையங்கள் துவக்குவதற்கு தயக்கமாக இருக்கிறது என, விவசாயிகள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட விவசாய சங்க நிர்வாகி பரசுராமன் கூறியதாவது:
காஞ்சிபுரம் மாவட்டத்தில், மீன் வளர்ச்சி கழகத்தின் செயல்பாடுகள் அறவே இல்லை. ஒரு மீன் வளத் துறை அதிகாரியை சந்திக்க வேண்டும் என்றால்கூட, சென்னைக்கு செல்ல வேண்டும் என, கூறுகின்றனர். அவர்களின் மொபைல்போன் மற்றும் ஒரு அலுவலகம் இருந்தால், அந்த துறை சார்ந்த திட்டங்கள், மானியங்கள் குறித்து தெரிந்துக் கொள்ள சவுகரியமாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
காஞ்சிபுரம் மாவட்ட மீன் வளத் துறை உதவி இயக்குனர் ஜனார்தனன் கூறியதாவது:
தமிழ்நாடு மின் வளர்ச்சி கழகத்தில், ஐந்து விதமான துறைகள் செயல்படுத்தப்படுகின்றன. இந்த துறைகளின் மூலமாக, மீனவர்கள் மற்றும் விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை அந்தந்த மாவட்டங்களுக்கு ஏற்ப செயல்படுத்தி வருகிறோம்.
காஞ்சிபுரம் மாவட்டத்தை பொருத்தவரையில், கடல் சார்ந்த பகுதிகள் அறவே இல்லை. இருப்பினும், வேளாண் பொறியியல் துறையில், புதிய மீன் வளர்ப்பு குளங்கள் வெட்டுவதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
அதில், மீன் குஞ்சுகள் விட்டு வளர்க்க மீன் வளத் துறையினர் செயல்படுத்தி வருகின்றனர். இதுதவிர, 21 மின் வள கூட்டுறவு சங்கங்களும் இயங்கி வருகின்றன. அதற்கு, தேவையான திட்டங்களை வழங்கி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.