ADDED : பிப் 18, 2025 08:32 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில், பெரிய அளவில் மற்றும் சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம்கள் தொடர்ந்து நடத்தப்படுகின்றன. அந்த வகையில், டிசம்பர் மாதத்திற்கான வேலைவாய்ப்பு முகாம், வரும் 22ம் தேதி காஞ்சிபுரம் சீனிவாசன் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியிலும், ராணி அண்ணாதுரை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெற உள்ளது.
இதில், 100க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, காலி பணியிடங்களுக்கான நேர்முக தேர்வு நடத்த உள்ளனர். பட்டதாரிகள், டிப்ளமா, ஐ.டி.ஐ., பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு படித்தவர்கள் தேர்ந்தெடுக்க உள்ளனர்.
எனவே, 18 - 35 வயது வரை உள்ளவர்கள், தங்களுடைய கல்வி சான்றிதழ்கள், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன், காலை 9:30 மணிக்கு, வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி கேட்டுக் கொண்டுள்ளார்.

