/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பள்ளி சமையல் கூடத்தில் எரிவாயு கசிவால் தீ விபத்து
/
பள்ளி சமையல் கூடத்தில் எரிவாயு கசிவால் தீ விபத்து
ADDED : ஜூலை 07, 2025 11:59 PM

உத்திரமேரூர், சாலவாக்கம் அரசு தொடக்கப் பள்ளியின் சமையல் கூடத்தில், எரிவாயு கசிவால் தீ விபத்து ஏற்பட்டது.
உத்திரமேரூர் ஒன்றியம், சாலவாக்கம் கிராமத்தில் அரசு தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, 123 மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளி வளாகத்தில் சமையல் கூடம் உள்ளது. இங்கு, நேற்று காலை வழக்கம்போல மாணவ - மாணவியருக்கு உணவு சமைக்கும் பணியில் சமையலர் ஈடுபட்டு கொண்டிருந்தார்.
அப்போது, சிலிண்டரில் எரிவாயு கசிவு ஏற்பட்டு தீப்பற்றி எரிந்தது.
இதை கண்ட சமையலர் அலறி அடித்துக் கொண்டு உணவு சமைக்கும் கூடத்தில் இருந்து வெளியே ஓடி வந்தார்.
இது குறித்து சாலவாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் பொதுமக்களுடன் சேர்ந்து, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில், பள்ளி சமையல் கூடத்தில் வைக்கப்பட்டிருந்த உணவு பொருட்கள் எரிந்து சேதமாகின.
சமையல் கூடத்தில் தீ விபத்து ஏற்பட்டவுடன், பள்ளியில் படிக்கும் மாணவ - மாணவியர் அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டு, அருகிலுள்ள கோவில் வளாகத்தில் அமர வைக்கப்பட்டனர்.