/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஜரிகையை தொடர்ந்து பட்டுச்சேலை விலையும்...கிடுகிடு:விற்காமல் தேங்குவதால் நெசவாளர்கள் கவலை
/
ஜரிகையை தொடர்ந்து பட்டுச்சேலை விலையும்...கிடுகிடு:விற்காமல் தேங்குவதால் நெசவாளர்கள் கவலை
ஜரிகையை தொடர்ந்து பட்டுச்சேலை விலையும்...கிடுகிடு:விற்காமல் தேங்குவதால் நெசவாளர்கள் கவலை
ஜரிகையை தொடர்ந்து பட்டுச்சேலை விலையும்...கிடுகிடு:விற்காமல் தேங்குவதால் நெசவாளர்கள் கவலை
ADDED : ஜூன் 04, 2025 01:26 AM

காஞ்சிபுரம்:தங்கம், வெள்ளி விலையேற்றத்தால், ஜரிகை விலை கிராம் 110 ரூபாய் வரை உயர்ந்துள்ளதால், பட்டு சேலைகளின் விலையும், 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இதன் காரணமாக, பட்டு வகைகள் தேங்குவதால் உற்பத்தியாளர்கள், நெசவாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
காஞ்சிபுரத்தில் கைத்தறியால் உற்பத்தி செய்யப்படும் பட்டு சேலைகள், உலக புகழ் பெற்றவை. மத்திய அரசின் புவிசார் குறியீடு உள்ளதால், காஞ்சி பட்டு சேலை விற்பனைக்கு மேலும் ஊக்கமாக உள்ளது.
பாரம்பரிய பட்டு சேலைகள் உற்பத்தி, பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால், விற்பனை சரிந்து, நெசவாளர்கள் நேரடியாக பாதிக்கப்படுகின்றனர்.
கைத்தறி சங்கத்திலும், தனியாரிடமும், 30,000த்திற்கும் மேற்பட்ட நெசவாளர்கள் பணியாற்றுகின்றனர். மூலப்பொருட்கள் விற்பனை, சாயமிடுதல் என, நெசவு பணியின் பிற தொழில்களை நம்பியும் ஆயிரக்கணக்கானோர் உள்ளனர்.
ஜரிகை உற்பத்தியில் தங்கமும், வெள்ளியும் முக்கிய மூலப்பொருட்களாக உள்ளன. காஞ்சிபுரம் ஓரிக்கையில் உள்ள தமிழ்நாடு ஜரிகை ஆலையில் உற்பத்தி செய்யப்படும் ஜரிகையே, காஞ்சிபுரம் பட்டு சேலைகளுக்கு பிரதானம்.
ஜரிகையில், 0.5 சதவீதம் தங்கமும், 40 சதவீதம் வெள்ளியும், 35.5 சதவீதம் காப்பரும், 24.0 சதவீதம் பட்டு இழையும் உள்ளன.
தங்கம், வெள்ளி போன்ற பொருட்கள் இணைத்து உற்பத்தி செய்யப்பட்ட ஜரிகையை பயன்படுத்தி, பட்டு சேலைகள் நெய்யப்படுவதால், 25 ஆண்டுகளுக்கு மேலாகவும், காஞ்சிபுரம் பட்டு சேலைகள் தரமாக உள்ளன.
இதன் காரணமாக தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மட்டுமின்றி, வட மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் காஞ்சிபுரம் வந்து, பட்டுச்சேலை வாங்கிச் செல்கின்றனர்.
கைத்தறி கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் கடைகள் வாயிலாக, ஆண்டுக்கு சராசரியாக 300 கோடி ரூபாய்க்கு பட்டு சேலை வியாபாரம் காஞ்சிபுரத்தில் நடக்கிறது.
கூலி பிரச்னை, நெசவாளர்கள் பற்றாக்குறை, விற்பனை மந்தம் என, பல்வேறு பிரச்னைகள் நடுவே, தங்கம் மற்றும் வெள்ளி விலையேற்றம் காரணமாக, ஜரிகை விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
இதன் காரணமாக, காஞ்சி பட்டுச்சேலைகள் விலையும் உயர்ந்து, வர்த்தகம் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
தங்கம் விலை நாளுக்கு நாள் ஏறுவதால், பட்டுச்சேலை உற்பத்தியாளர்களும் கலக்கம் அடைந்துள்ளனர். இன்றைய சூழலில், கிராம் தங்கத்தின் விலை 8,000 ரூபாய்க்கும், வெள்ளி ஒரு கிராம் 109 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
சமீபத்தில் தங்கம் மற்றும் வெள்ளி விலை கிடுகிடுவென ஏறியதால், பட்டு சேலையின் மூலப்பொருளான ஜரிகை விலையும் கிடுகிடுவென உயர்ந்தது. நேற்றைய நிலவரப்படி, ஜரிகை விலை ஒரு கிராமுக்கு 100ஐ கடந்து, 110 ரூபாய் வரையில் விற்கப்படுகிறது.
இதனால், பட்டுச்சேலை விலையையும், உற்பத்தியாளர்கள் ஏற்றியுள்ளனர். தனியார் பட்டுச்சேலை உற்பத்தியாளர்களும், கைத்தறி கூட்டுறவு சங்கங்களும், ஜரிகை விலையேற்றம் காரணமாக, பட்டுச்சேலை விலையையும், ரகத்திற்கு ஏற்ப, 1,000 ரூபாய் முதல், 5,000 ரூபாய் வரை உயர்த்த வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளனர்.
விலையேற்றத்தால் விற்பனை பாதிக்கப்படுவதால், நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலை கொடுக்க முடியாமல் போகும் சூழல் ஏற்படுவதாக, பட்டு சேலை உற்பத்தியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து, கைத்தறி பட்டு சேலை உற்பத்தியாளர்கள் கூறியதாவது:
கைத்தறி சங்கத்தில், சுத்தமான உயர் மதிப்பு கொண்ட ஜரிகையை மட்டுமே பயன்படுத்துகிறோம். பல தனியார் கடைகள் சுத்தமான ஜரிகையை பயன்படுத்தாமல் ஏமாற்றுகின்றன.
தற்போது, சுத்தமான ஜரிகை கிராம், 110 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கைத்தறி கூட்டுறவு சங்கங்களில், முதல் தர ஜரிகையை வைத்து, பட்டுச் சேலைகள் உற்பத்தி செய்யப்படுவதால், அவற்றின் விலை சற்று அதிகமாகவே இருக்கும்; ஆனால், தரமானதாக இருக்கும்.
தங்கம், வெள்ளி விலையேற்றம் காரணமாக, பட்டுச்சேலைகள் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. அதாவது, 30 சதவீதம் வரை விலை உயர்ந்துள்ளது.
விலையை பார்த்து, வாடிக்கையாளர்கள் வாங்க தயங்குகின்றனர். தங்கம், வெள்ளி விலை விலையேற்றத்தால், கோடிக்கணக்கான மதிப்பிலான பட்டுச்சேலைகள் தேக்கம் ஏற்படுமோ என அச்சமாக உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.