/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சியில் 2 நாளாக வாகனங்கள் வராததால் மூட்டை மூட்டையாக தேங்கிய குப்பை கழிவு
/
காஞ்சியில் 2 நாளாக வாகனங்கள் வராததால் மூட்டை மூட்டையாக தேங்கிய குப்பை கழிவு
காஞ்சியில் 2 நாளாக வாகனங்கள் வராததால் மூட்டை மூட்டையாக தேங்கிய குப்பை கழிவு
காஞ்சியில் 2 நாளாக வாகனங்கள் வராததால் மூட்டை மூட்டையாக தேங்கிய குப்பை கழிவு
ADDED : ஜன 03, 2026 05:21 AM

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சியில் சேகரமாகும் குப்பை கழிவுகளை அள்ள 2 நாட்களாக குப்பை வண்டிகள் வராததால், மாநகராட்சி முழுதும் மூட்டை, மூட்டையாக குப்பை கழிவு தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது.
காஞ்சிபுரம் மாநகராட்சியில், 4 மண்டலங்களின் கீழ், 51 வார்டுகள் உள்ளன.
நகர் முழுதும் குப்பை, கழிவுகளை அகற்றுவதற்கு போதிய பணியாளர்களும், வாகனங்களும் இல்லாததால், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் சரம் என்ற தனியார் நிறுவனத்திற்கு டெண்டர் விடப்பட்டது. 51 வார்டுகளிலும் அகற்றப்படும் குப்பை கழிவுகளின் எடைக்கு ஏற்ப, தனியார் ஒப்பந்த நிறுவனத்திற்கு பில் தொகை வழங்கப்படுகிறது.
அந்த வகையில், ஒவ்வொரு மாதமும் 80 லட்ச ரூபாய் முதல் ஒரு கோடி ரூபாய் வரை பில் தொகை வழங்கப்படுகிறது.
ஆனால், தனியார் நிறுவனம் போதிய வாகனங்களை பயன்படுத்துவதில்லை என கவுன்சிலர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். குப்பை அகற்ற, 94 பேட்டரி வாகனங்களும், 53 இலகு ரக வாகனங்களும் தனியார் ஒப்பந்த நிறுவனம் வைத்திருக்க வேண்டும். ஆனால், 59 பேட்டரி வாகனங்களும், 26 இலகு ரக வாகனங்கள் மட்டுமே வைத்துள்ளனர் .
இந்நிலையில் கடந்த இரு மாதங்களாக பில் தொகையை மாநகராட்சி நிர்வாகம் வழங்காததால், தனியார் நிறுவனம், கடந்த இரு நாட்களாக, குப்பை அகற்றுவதற்கான வாகனங்கள் அனுப்பாமல் உள்ளது.
இதனால், கோவில் நகரமான காஞ்சிபுரம் முழுதும் சாலையோரங்களில் குப்பை கழிவுகள் தேங்கி, துர்நாற்றம் வீசுகிறது.
லட்சக்கணக்கில் பில் தொகை பெறும் தனியார் நிறுவனம், குப்பையை தரம் பிரிக்கவோ, அவற்றை முறையாக கையாள்வதோ கிடையாது.
குப்பை சரிவர அகற்றப்படவில்லை எனவும், ஒப்பந்த நிறுவனத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும், மாநகராட்சி கூட்டம் நடக்கும்போதெல்லாம் கவுன்சிலர்கள் குரல் கொடுக்கின்றனர். ஆனால், தனியார் நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை.
மாநகராட்சி முழுதும் நேற்று தேங்கி கிடந்த குப்பையை, துப்புரவு பணி யாளர்கள் மூட்டை கட்டி, சாலை ஓரங்களில் வைத்திருந்தனர். ஆனால், அதை எடுத்து செல்ல வாகனங்கள் வராததால், துர்நாற்றம் வீசியது.
கோவில் நகரமான காஞ்சிபுரத்தில், சாலையோரங்களில் தேங்கி கிடந்த குப்பை கழிவுகளை பார்த்த சுற்றுலா பயணியரும், பக்தர்களும் முகம் சுளித்தவாறு சென்றனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சி கமிஷனர் பாலசுப்ரமணியத்திடம் கேட்டபோது, 'இதுகுறித்து விசாரிக்கிறேன்' என, மழுப்பலாக பதில் அளித்தார்.
துாய்மையான நகரங்கள் பட்டியலில், நாடு முழுதும் எடுத்த கணக்கெடுப்பில், காஞ்சிபுரம் மாநகராட்சி 395 வது இடத்தை கடந்தாண்டு பிடித்தது.
குப்பை விவகாரத்தில் மாநகராட்சியும் தனியார் ஒப்பந்த நிறுவனமும் குளறுபடி செய்து வந்தால், இந்த தர வரிசை பின்தங்கி செல்லும் என்பதில் சந்தேகமில்லை.

