/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சிசுவை கொன்ற கொடூர தாய் வாலாஜாபாத் அருகே பயங்கரம்
/
சிசுவை கொன்ற கொடூர தாய் வாலாஜாபாத் அருகே பயங்கரம்
ADDED : ஜன 10, 2025 08:45 PM
வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியம் களியனுாரைச் சேர்ந்தவர் பூமிகா, 24. இவர், செங்கல்பட்டு அருகே தனியார் கம்பெனியில் பணியாற்றி வந்தார். அப்போது, அதே கம்பெனியில் பணியாற்றும் திண்டிவனத்தைச் சேர்ந்த வாலிபரோடு பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இருவரும் நெருங்கி பழகி வந்ததையடுத்து, பூமிகா கர்ப்பமானார். நேற்று முன்தினம் பூமிகாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டதை தொடர்ந்து, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அன்றிரவே அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.
நேற்று அதிகாலை பூமிகா மற்றும் பச்சிளம் குழந்தை காணாமல் போனது அறிந்து மருத்துவமனை செவிலியர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அளித்த புகாரின்படி, சிவகாஞ்சி மற்றும் வாலாஜாபாத் போலீசார் விசாரித்தனர்.
அப்போது, மருத்துவமனை வளாகம் மற்றும் காஞ்சிபுரம் - வாலாஜாபாத் சாலையில் உள்ள 'சிசிடிவி' கேமரா காட்சிகள் அடிப்படையில் பூமிகா போலீசாரிடம் பிடிபட்டார்.
போலீசார் விசாரணையில், வாலாஜாபாத் ஒன்றியம், முத்தியால்பேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட வள்ளுவப்பாக்கத்தில் உள்ள விவசாய கிணற்றில், குழந்தையை பூமிகா வீசி கொன்றது தெரியவந்தது.
இதையடுத்து, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை உள்நோயாளிகள் பிரிவில், பூமிகா சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

