/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பூங்காவை சீரமைக்க காஞ்சி மக்கள் வலியுறுத்தல்
/
பூங்காவை சீரமைக்க காஞ்சி மக்கள் வலியுறுத்தல்
ADDED : செப் 28, 2025 01:22 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் கே.எம்.வி., நகரில், பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்களை சுற்றி வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்ற வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சி, 24வது வார்டு கே.எம்.வி., நகரில், 2011ல், 20 லட்சம் ரூபாய் செலவில் பூங்கா அமைக்கப்பட்டது.
சிறுவர்களுக்கான ஊஞ்சல், சீசா, சறுக்கு விளையாட்டு உபகரணங்கள், நடைபயிற்சி மேற்கொள்ள நடைபாதை, இரவில் ஒளிரும் மின்விளக்கு, அமரும் இருக்கை, அழகிய மலர் செடிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் பூங்கா அமைக்கப்பட்டது.
முறையான பராமரிப்பு இல்லாததால், பூங்காவில் செடி, கொடிகள் வளர்ந்துள்ளதால் விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகம் உள்ளன.
மேலும், மின்விளக்குகளும் பழுதடைந்துள்ளதால், இரவு நேரத்தில் பூங்கா இருள்சூழ்ந்து காணப்படுவதால், அப்பகுதி மக்கள் அச்சப்படுகின்றனர்.
சிறுவர்களுக்கான சீசா விளையாட்டு உபகரணம் உடைந்த நிலையில் உள்ளது. சறுக்கு விளையாட்டு உபகரணத்தை சுற்றிலும் செடி, கொடிகள் அதிகளவில் வளர்ந்துள்ளன.
சிறுவர்கள் விளையாட்டு உபகரணங்களை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
எனவே, சின்ன காஞ்சிபுரம் கே.எம்.வி., நகர் பூங்காவில் வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்றவும், பழுதடைந்த சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள், மின்விளக்குகளை சீரமைப்பதோடு, தொடர்ந்து பூங்காவை பராமரிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.