/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சி வரதர் கோவில் தேரோட்டம் கோலாகலம்
/
காஞ்சி வரதர் கோவில் தேரோட்டம் கோலாகலம்
ADDED : மே 18, 2025 02:34 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், நடப்பாண்டிற்கான பிரம்மோத்சவம் கடந்த 11ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தங்க சப்பரத்திலும், இரவு சிம்ம வாகனத்திலும் வரதராஜ பெருமாள் எழுந்தருளி வீதியுலா வந்தார்.
மூன்றாம் நாளான கடந்த 13ம் தேதி காலை கருடசேவை உத்சவம் வெகு விமரிசையாக நடந்தது. இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இரவு, அனுமந்த வாகன உத்சவம் நடந்தது.
ஏழாம் நாள் உத்சவமான நேற்று காலை தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று பக்தி பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் வெள்ளம்
தேரோட்டத்தை காண அதிகாலை 4:00 மணியில் இருந்தே ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரடி பகுதியில் குவிய துவங்கினர். அதிகாலை 4:40 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவியருடன், வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து புறப்பட்டு, 5:10 மணிக்கு தேரில் எழுந்தருளினார்.
பல்வேறு பூஜைகளுக்குப்பின், காலை 6:10 மணிக்கு, அதிர்வேட்டுகள் முழங்க, வரதா, கோவிந்தா, அத்திவரதா, பரந்தாமா, தேவாதிராஜா என்ற கரகோஷங்களுடன், வடம் பிடித்து இழுக்க, லட்சக்கணக்கான பக்தர்களின் வெள்ளத்திற்கு இடையே தேர் அசைந்து ஆடியபடியே புறப்பட்டது.
நேற்று விடுமுறை தினமாகவும், வெயிலின் தாக்கம் மிகவும் குறைந்து மேகமூட்டமாக காணப்பட்டதால், மூங்கில் மண்டபம், கங்கை கொண்டான் மண்டபம், சங்கரமடம், பூக்கடை சத்திரம், பேருந்து நிலையம் உள்ளிட்ட சந்திப்புகளில், கடந்த ஆண்டைவிட, லட்சக்கணக்கான பக்தர்கள் காத்திருந்து வரதராஜ பெருமாளை வழிபட்டனர்.
நான்கு ராஜ வீதி வழியாக பக்தர்களின் வெள்ளத்திற்கு இடையே பவனி வந்த தேர், காலை 11:50 மணிக்கு நிலைக்கு வந்தது. பின் தேரில் எழுந்தருளிய பெருமாளை தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
தீர்த்தவாரி
பக்தர்களின் பாதுகாப்புக்காக காஞ்சிபுரம் எஸ்.பி., சண்முகம் தலைமையில், 750 போலீசார், ஊர்காவல் படையினர், தேசிய மாணவர் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தேரோட்டத்தில், '108' அவசரகால ஆம்புலன்ஸ் சேவை வாகனமும், தீயணைப்பு வாகனமும் உடன் வந்தன. தேரோட்டத்தையொட்டி பாதுகாப்பு நடவடிக்கையாக தேர் செல்லும் பகுதியை ஒட்டி, மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. தேர் சென்ற பின் மீண்டும் மின்சாரம் வழங்கப்பட்டது.
வைகாசி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாள் உத்சவமான நாளை காலை 10:00 மணிக்கு அனந்தசரஸ் திருக்குளத்தில், தீர்த்தவாரி உத்சவம் நடக்கிறது.
உத்சவத்திற்கான ஏற்பாட்டை கோவில் உதவி ஆணையரும், நிர்வாக அறங்காவலருமான ராஜலட்சுமி, கோவில் பட்டாச்சாரியார்கள், பணியாளர்கள், உபயதாரர்கள் இணைந்து செய்திருந்தனர்.