/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காவூர் சாலை பணி பாதியில் நிறுத்தம் வாகன ஓட்டிகள் அவதி
/
காவூர் சாலை பணி பாதியில் நிறுத்தம் வாகன ஓட்டிகள் அவதி
காவூர் சாலை பணி பாதியில் நிறுத்தம் வாகன ஓட்டிகள் அவதி
காவூர் சாலை பணி பாதியில் நிறுத்தம் வாகன ஓட்டிகள் அவதி
ADDED : மே 09, 2025 01:57 AM

காவூர்:உத்திரமேரூர் ஒன்றியம், ஒரக்காட்டுப்பேட்டை பாலாற்று பாலம் அருகே பிரிந்து, காவூர் கிராமத்திற்கு செல்லும் 2 கி.மீ., ஒன்றிய கட்டுப்பாட்டிலான சாலை உள்ளது.
காவூர், காவிதண்டலம் உள்ளிட்ட கிராமத்தினர், இச்சாலை வழியை பயன்படுத்தி,
செங்கல்பட்டு மற்றும் சுற்று வட்டார கிராமங்களுக்கு சென்று வருகின்றனர்.
கடந்த 2022ல், சென்னை- திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள மாமண்டூர் பாலாற்று பாலம் சீரமைப்பு பணி நடந்தது.
அப்போது, சென்னை- திருச்சி நெடுஞ்சாலையில் பயணித்த அனைத்து வகை வாகனங்களும் காவூர் கிராம சாலை வழியாக செங்கல்பட்டு பைபாஸ் சாலைக்கு மாற்றி விடப்பட்டது.
அச்சமயம் நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் காவூர் சாலையில் இயங்கியதால் அச்சாலை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமானது. இதனால், இச்சாலை வழியாக பயணித்த வாகன ஓட்டிகள் தினசரி அவதிபட்டு வந்தனர்.
காவூர் சாலையை சீரமைத்து பயன்பாட்டிற்கு விட அப்பகுதி வாசிகள் வலியுறுத்தினர்.
அதன்படி, காவூர் கிராம சாலையை சீரமைக்க நபார்டு திட்ட நிதியின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன் அதற்கான பணி துவங்கியது. எனினும், பணி தொடர்ந்து மேற்கொள்ளாமல் பாதியில் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
இதனால், சாலையில் கொட்டப்பட்ட ஜல்லி கற்கள் இருசக்கர வாகனங்களின் டயர்களை பதம் பார்ப்பதோடு, இரவு நேரங்களில் பலரும் விபத்திற்குள்ளாகி வருகின்றனர். சாலை வழியாக நடந்து செல்வோரும் சிரமபடுகின்றனர்.
எனவே, பாதியில் நிறுத்தம் செய்யப்பட்ட காவூர் சாலை பணியை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.
கால்வாயில் ஆக்கிரமிப்பு
வண்டலுார் -- வாலாஜாபாத் சாலையில் இருந்து பிரிந்து செல்லும், பண்ருட்டி பிரதான வழியே, மேட்டுபாளையம், குண்ணம் கிராம வாசிகள், பல்வேறு தேவைகளுக்காக, ஒரகடம், படப்பை, வாலாஜாபாத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
இந்த சாலையில், பண்ருட்டி முத்தரையர் தெருவில் ஏற்படும் வெள்ள பாதிப்பை தடுக்கு வகையில், மழைநீர் வடிந்து செல்ல, பண்ருட்டி ஊராட்சி மன்றம் அலுவலகம் அருகே, சாலையின் குறுக்கே சிறுபாலம் கட்டப்பட்டது.
இந்நிலையில், அதேபகுதியை சேர்ந்த நபர் ஒருவர், சிறுபாலத்தின் ஒரு பக்கம் உள்ள மழைநீர் கால்வாயை மண்ணை கொட்டி மூடி, அங்கு வாகனங்களை நிறுத்தி வருகிறார்.
இதனால், மழை காலங்களில் வெள்ள நீர் வெளியேர வழியில்லாமல், சாலையில் வழிந்து வீடுகளில் புகுந்து, வெள்ள பாதிப்பு ஏற்படும் சூழல் உள்ளது. சாலையில் வெளியேறும் மழைநீரால், மண் அரிப்பு ஏற்பட்டு, சாலை சேதமாகும் நிலை உள்ளது.
எனவே, சிறுபால கால்வாயில் மண்ணை கொட்டி மூடியுள்ளதை அகற்றி, மழைநீர் சீராக வெளியேறும் வகையில், மழைநீர் கால்வாய் வழித்தடத்தை ஏற்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்கின்றனர்.