/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வல்லக்கோட்டை முருகன் கோவிலில் 17 ஆண்டுகள் பின் ஜூலையில் கும்பாபிஷேகம்
/
வல்லக்கோட்டை முருகன் கோவிலில் 17 ஆண்டுகள் பின் ஜூலையில் கும்பாபிஷேகம்
வல்லக்கோட்டை முருகன் கோவிலில் 17 ஆண்டுகள் பின் ஜூலையில் கும்பாபிஷேகம்
வல்லக்கோட்டை முருகன் கோவிலில் 17 ஆண்டுகள் பின் ஜூலையில் கும்பாபிஷேகம்
ADDED : மே 15, 2025 06:45 PM
ஸ்ரீபெரும்புதுார்:காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் அருகே, வல்லக்கோட்டை முருகன் கோவில் அமைந்துள்ளது. 1,200 ஆண்டுகளுக்கு மேல் பழமைவாய்ந்த இக்கோவில், ஏழு அடி உயரத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் அருபாளிக்கிறார்.
இக்கோவிலில் ஆகம விதிப்படி, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடப்பது வழக்கம். அதன் படி, 2008ம் ஆண்டு கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடந்தது.
இதையடுத்து, கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் செய்ய, ஹிந்து சமய அறநிலைத் துறையினர் திட்டமிட்டனர். அதன்படி, திருகோவில் நிதி, உபயதாரர்கள் நிதி 1.25 கோடி ரூபாய் மதிப்பில், 2023ம் ஆண்டு, மார்ச் மாதம் புனரமைப்பு பணிகள் துவங்கின.
மூலவர் முருகன் விமானம், விநாயகர் சன்னதி விமானம், சண்முகர் சன்னதி விமானம், ராஜகோபுரம், கருமாரியம்மன் ஐந்து நிலை ராஜகோபுரம் உள்ளிட்டவைகளுக்கு வர்ணம் தீட்டும் பணி நடந்தது.
அதை தொடர்ந்து, பிரகாரத்தில் கருங்கல் தரைத்தளம் அமைத்தல், செப்பனிடும் பணிகள், மடப்பள்ளி சீரமைக்கும் பணி, இடும்பன், கடம்பன், பைரவர் சன்னதிகள் சீரமைக்கும் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
புனரமைப்பு பணிகள் முடிந்து, வரும் ஜூலை மாதம் 7ம் தேதி கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடைபெற உள்ளது.
வல்லக்கோட்டை முருகன் கோவிலில், 17 ஆண்டுகளுக்கு பின் நடைபெற உள்ள கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருவதாக கோவில் செயல் அலுவலர் செந்தில்குமார் தெரிவித்தார்.