/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பல்லாங்குழியான தேசிய நெடுஞ்சாலை நெரிசலில் சிக்கும் வாகன ஓட்டிகள்
/
பல்லாங்குழியான தேசிய நெடுஞ்சாலை நெரிசலில் சிக்கும் வாகன ஓட்டிகள்
பல்லாங்குழியான தேசிய நெடுஞ்சாலை நெரிசலில் சிக்கும் வாகன ஓட்டிகள்
பல்லாங்குழியான தேசிய நெடுஞ்சாலை நெரிசலில் சிக்கும் வாகன ஓட்டிகள்
ADDED : அக் 28, 2025 11:52 PM

ஸ்ரீபெரும்புதுார்: சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், மாம்பாக்கம், சுங்கு வார்சத்திரம் பகுதிகளில் புதிதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலம் அருகே, சாலை குண்டும் குழியுமாக மாறியுள்ளதால், வாகன ஓட்டிகள் நெரிசலில் சிக்கி தினமும் அவதி அடைந்து வருகின்றனர்.
சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், தினமும் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. தேசிய நெடுஞ்சாலையை கடக்கும் வாகனங்களால், நெரிசல் மற்றும் வாகன விபத்துகள் ஏற்பட்டு வந்தன.
விபத்தை தவிர்க்க, சென்னை -- பெங்களூரு தேசிய நான்குவழிச் சாலையை, ஆறுவழிச் சாலையாக அகலப்படுத்தவும், 18 இடங்களில் சிறுபாலங்கள் மற்றும் மூன்று இடங்களில் மேம்பாலங்கள் அமைக்கவும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டது.
இதற்காக, 654 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, மூன்று பிரிவுகளாக ஒப்பந்தம் விடப்பட்டது.
இதன்படி, மதுரவாயல் -- ஸ்ரீபெரும்புதுார் வரை, 23 கி.மீ., ஸ்ரீபெரும்புதுார் - - காரப்பேட்டை வரையில், 34 கி.மீ., காரப்பேட்டை - வாலாஜாபேட்டை வரையில், 36 கி.மீ., விரிவாக்க பணிகள் நடந்து வருகின்றன.
மாம்பாக்கம், சுங்குவார்சத்திரம், சந்தவேலுார், சேந்தமங்கலம், பிள்ளைசத்திரம் ஆகிய இடங்களில் 2021ம் ஆண்டு துவங்கிய மேம்பாலங்களின் கட்டுமான பணிகள், கால அவகாசம் நிறைவடைந்தும் முடிக்கப்படாமல் உள்ளன.
இந்த நிலையில், பாலங்களின் அருகே உள்ள சாலைகள் மழையில் சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறியுள்ளன.
அதில், குதித்து குதித்து செல்லும் வாகனங்களால், வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர்.
இதனால், காலை மற்றும் மாலை நேரங்களில், நெடுஞ்சாலையில் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
எனவே, சேதமான சாலைகளை சீரமைத்து, மேம்பால கட்டுமான பணிகளை நெடுஞ்சாலை துறையினர் விரைந்து முடிக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

