/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 2ம் தேதி துவக்கம்
/
காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 2ம் தேதி துவக்கம்
காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 2ம் தேதி துவக்கம்
காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 2ம் தேதி துவக்கம்
ADDED : செப் 28, 2024 07:30 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், புரட்டாசி மாதத்தில், ஸ்ரீதேவி நவராத்திரி மஹோத்ஸவம் 10 நாட்கள் விமரிசையாக நடைபெறும். அதன்படி, நடப்பாண்டிற்கான நவராத்திரி மஹோத்ஸவம் அக்., 2ம் தேதி காலை பூர்வாங்க சண்டி ஹோமத்துடன் துவங்குகிறது.
உற்சவத்தையொட்டி தினமும் காலை காமாட்சி அம்மனுக்கு விசேஷ அபிஷேக அலங்காரமும், நவாவர்ண பூஜை, கன்யா பூஜை மற்றும் ஸுவாஸினி பூஜை உள்ளிட்டவையும், இரவு, நவராத்திரி மண்டபத்தில் காமாட்சியம்மன் விசேஷ அலங்காரத்தில் எழுந்தருள செய்வித்து சூரசம்ஹார நிகழ்ச்சியும், தீபாராதனையும் மற்றும் பிரபல சங்கீத வித்வான்கள் பங்கேற்கும் சங்கீத கச்சேரி நடைபெறுகிறது.
காமாட்சியம்மனுக்கு முக்கிய நாட்களில் நவராத்திரி வைபவத்தில் லட்சார்ச்சனை மற்றும் சதுர்வேத பாராயணம், சண்டி ஸப்தசதி பாராயணமும் நடைபெறுகிறது.
நவராத்திரி உற்சவத்தின் எட்டாம் நாளான அக்., 10ம் தேதி இரவு, துர்காஷ்டமி, துர்க்கை புறப்பாடு, சூரசம்ஹாரம் பூர்த்தியும், 11ம் தேதி இரவு சரஸ்வதி பூஜையும், 12ம் தேதி இரவு விஜயதசமி, நவாவர்ணம் பூர்த்தியும், 13ம் தேதி இரவு ஸஹஸ்ர கலஸ ஸ்தாபனமும்,நவராத்திரி உற்சவம் நிறைவு நாளான அக்., 14ம் தேதி காலை ஸஹஸ்ர கலசாபிஷேகமும், இரவு ஊஞ்சல் புஷ்ப கைங்கர்யமும் நடைபெறுகிறது.
நவராத்திரி உற்சவத்தையொட்டி தினமும், இரவு 7:30 மணிக்கு, காஞ்சிபுரம் ஸ்ரீகாமாக்ஷி அம்பாள் ஸ்ரீசாரதா நவராத்திரி கலை நிகழ்ச்சிகள் டிரஸ்ட் சார்பில், காமாட்சியம்மன் கோவிலில் உள்ள நவராத்திரி மண்டபத்தில் தினமும், இரவு 7:30 மணிக்கு பிரபல சங்கீத வித்வான்கள் பங்கேற்கும் இன்னிசை மற்றும் இதர கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
விழாவிற்கான ஏற்பாட்டை கோவில் உதவி ஆணையர் - நிர்வாக அதிகாரி ஸ்ரீனிவாசன், ஆதீன பரம்பரை தர்மகர்த்தாவின் ஸ்ரீகார்யம் சுந்தரேச ஐயர், மணியகாரர் சூரியமூர்த்தி, ஸ்ரீகாமாக்ஷி அம்பாள் தேவஸ்தான ஆதீன பரம்பரை ஸ்தலத்தார், ஸ்தானீகர்கள் இணைந்து செய்துள்ளனர்.