/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஒரே மாதிரியை காட்டி வீடு கட்ட அதிகாரிகள்... கறார்! :'கலைஞர் கனவு இல்லம்' பயனாளிகள் அதிருப்தி
/
ஒரே மாதிரியை காட்டி வீடு கட்ட அதிகாரிகள்... கறார்! :'கலைஞர் கனவு இல்லம்' பயனாளிகள் அதிருப்தி
ஒரே மாதிரியை காட்டி வீடு கட்ட அதிகாரிகள்... கறார்! :'கலைஞர் கனவு இல்லம்' பயனாளிகள் அதிருப்தி
ஒரே மாதிரியை காட்டி வீடு கட்ட அதிகாரிகள்... கறார்! :'கலைஞர் கனவு இல்லம்' பயனாளிகள் அதிருப்தி
ADDED : செப் 11, 2024 12:29 AM

காஞ்சிபுரம்: 'கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தில் வீடு கட்டுவோரிடம், நான்கு மாதிரி வரைபடத்தில், ஒன்றின்படி மட்டும்தான் வீடு கட்ட வேண்டும் என, பணி மேற்பார்வையாளர் மற்றும் வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலர்வற்புறுத்துவதால், பயனாளிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய ஐந்து ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இதில், 274 ஊராட்சிகளில், 1,354 குக்கிராமங்கள் உள்ளன.
இதில், 2011ம் ஆண்டு சமூக பொருளாதாரம் மற்றும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டன. குடிசை வீடு இருக்கும் நபர்களுக்கு, வீடு கட்டுவதற்கு சில பயனாளிகளை தேர்வு செய்தனர்.
இதில், பிரதமர் வீடு வழங்கும் திட்டம் மற்றும் பசுமை வீடு வழங்கும் திட்டத்தில் வீடுகளை கட்டியுள்ளனர்.
ஆன்லைன்
இதையடுத்து, 'ஆவாஸ் பிளஸ்' திட்டத்தில், 2018ம் ஆண்டு வீடு தேவைப்படுவோருக்கு, ஊரக வளர்ச்சி துறையினர் ஆன்லைனில் பதிவேற்றம் செய்தனர்.
தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற பின், பசுமை வீடு வழங்கும் திட்டம் முடக்கப்பட்டு, கலைஞர் வீடு வழங்கும் திட்டத்திற்கு, 2021ம் ஆண்டு ஊரக வளர்ச்சித் துறையினர் மீண்டும் கணக்கெடுப்பு நடத்தியுள்ளனர்.
அதேபோல, 2022ம் ஆண்டு அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்திற்கு, புதிய குடிசை வீடுகளை கணக்கெடுப்பு நடத்தி முடித்துள்ளனர். இந்த கணக்கெடுப்பு வாயிலாக காஞ்சிபுரம் மாவட்டத்தில், 17,653 வீடுகள் தேவைப்படும் என, புள்ளி விபரம் தெரிய வந்துள்ளது.
கடந்த ஜூலை மாதம், கலைஞரின் கனவு இல்லம் கட்டும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில், 3,453 பயனாளிகளுக்கு, கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் வீடு கட்டும் ஆணையை, ஊரக வளர்ச்சித் துறை அளித்து உள்ளது.
எஞ்சி இருக்கும், 14,200 பேர்களை காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு உள்ளது. அவர்களுக்கு வீடுகள் வழங்கப்படும் என, ஊரக வளர்ச்சித் துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நிதி ஒதுக்கீடு
கலைஞரின் கனவு இல்லம் கட்டும் திட்ட பயனாளிகளுக்கு, நான்கு விதமான மாதிரி வரைபடங்களின்படி வீடுகள் கட்ட அரசு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளன.
வீடு கட்டும் திட்டத்தில் பயனாளிகள் தேர்வு செய்யும் மாதிரி வீட்டிற்கு, 3.50 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு கிடைக்கும்.
மேலும், வீடு கட்டும் ஆணை நகல் வழங்கினால், கூட்டுறவுத் துறையில், 1 லட்ச ரூபாய் வங்கி கடனுதவி வழங்கப்படும்.
மேலும், மகளிர் குழுவில் உறுப்பினராக இருந்தால், 50,000 ரூபாய் கூடுதல் கடனுதவி வழங்கப்படும் என, ஊரக வளர்ச்சித் துறையினர் தெரிவித்தனர்.
இருப்பினும், ஊரக வளர்ச்சித் துறையினர், கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் வீடு கட்டும் பயனாளிகளுக்கு, நான்கு விதமான மாதிரி வீடு வரைபடங்களை காட்டவில்லை.
ஒரே மாதிரி வரைபடத்தை காட்டி, நாங்கள் கூறுவதை போல தான் நீங்கள் வீடு கட்ட வேண்டும் என, பயனாளிகளை வற்புறுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால், கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் வீடு கட்டும் பயனாளிகள் வாஸ்து படி கட்ட முடியவில்லை என, புலம்பல் ஏற்படுத்தி உள்ளது.
குறிப்பாக, ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகளுக்கும், பயனாளிகளுக்கும் இணக்கம் இன்றி போனால், இந்த வீடு கட்டும் திட்டம் முடங்கும் அபாயம் உள்ளது என, பயனாளிகள் தரப்பில் தெரிவித்தனர்.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கலைஞர் வீடு வழங்கும் திட்டத்திற்கு, 360 சதுர அடியில் கான்கிரீட் வீடு கட்ட வேண்டும்.
இத்திட்டத்தில் தேர்வான பயனாளிகள், நான்கு விதமான மாதிரி வீடுகளில், ஏதேனும் ஒரு மாதிரி வீடுகளை தேர்வு செய்து கட்டலாம். வீடு கட்டும் பயனாளிகளின் விருப்பம் தான். அதிகாரிகளின் விருப்பம் ஏதுவும் கட்டாயம் கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.
கலைஞர் கனவு இல்ல திட்ட வாலாஜாபாத் பயனாளி ஒருவர் கூறியதாவது:
'கலைஞர் கனவு இல்லம்' கட்டும் திட்டத்தில், நான்கு விதமான மாதிரி வரைபடங்களை அரசு வெளியிட்டுள்ளது. இதில், ஏதேனும் ஒரு மாதிரி வரைபடத்தின் படி வீடு கட்டிக்கொள்ளலாம் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பணி மேற்பார்வையாளர் மற்றும் வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர், முதல் வரைபடத்தின் படி தான், பயனாளிகள் வீடு கட்ட வேண்டும் என, வற்புறுத்தி வருகின்றனர்.
பி.டி.ஓ., கூறும்படி கட்டினால், வாஸ்து சரியாக வரவில்லை. வீடு கட்டுவதற்கு ஒருமுறை தான் வாய்ப்பு கிடைக்கும்.
அந்த வாய்ப்பை பயன்படுத்தி, கூடுதல் பணத்தை செலவிட்டு நல்ல முறையில் வீடு கட்டிக் கொள்ள வேண்டும் என, பயனாளிகள் நினைப்பது தவறு ஒன்றுமில்லை. பயனாளிகள் விரும்பும் படி வீடு கட்ட அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வீடு கட்டும் பயனாளிகளுக்கு கொடுத்த திட்ட மதிப்பீட்டு அறிக்கையின்படி முதல் மாதிரி வரைபடம் கொடுத்துள்ளனர். அதன்படி தான் பயனாளிகள் வீடு கட்ட வேண்டும். ஒரே இடத்தில், நிறைய வீடுகள் கட்டுவதால், ஒரே மாதிரியான வீடுகள் இருக்க வேண்டும் என கூறினேன். வேறு ஒன்றுமில்லை.
நா. காஞ்சனா,
வட்டார வளர்ச்சி அலுவலர், வாலாஜாபாத்.