/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பள்ளியகரம் - நெல்வாய்மங்கலம் நான்குவழி பாதையாகிறது...ரூ.79.25 கோடி!:செவிலிமேடு - கீழம்பி சாலையை விரிவாக்கவும் திட்டம்
/
பள்ளியகரம் - நெல்வாய்மங்கலம் நான்குவழி பாதையாகிறது...ரூ.79.25 கோடி!:செவிலிமேடு - கீழம்பி சாலையை விரிவாக்கவும் திட்டம்
பள்ளியகரம் - நெல்வாய்மங்கலம் நான்குவழி பாதையாகிறது...ரூ.79.25 கோடி!:செவிலிமேடு - கீழம்பி சாலையை விரிவாக்கவும் திட்டம்
பள்ளியகரம் - நெல்வாய்மங்கலம் நான்குவழி பாதையாகிறது...ரூ.79.25 கோடி!:செவிலிமேடு - கீழம்பி சாலையை விரிவாக்கவும் திட்டம்
ADDED : நவ 14, 2024 01:10 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், பள்ளியகரம் - நெல்வாய்மங்கலம்; செவிலிமேடு - கீழம்பி சாலையை நான்குவழிச் சாலையாக விரிவுபடுத்துவதற்கு, 79.25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. டெண்டர் விட்ட பின், மொத்தம் 11.60 கி.மீ., துாரத்திற்கு சாலை விரிவுபடுத்தும் பணிகள் துவக்கப்படும் என, நெடுஞ்சாலைத் துறையினர் தெரிவித்தனர்.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய இரு மாவட்டங்களிலும், தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை, மாவட்ட சாலை, இதர சாலை என, மொத்தம், 2,253 கி.மீ., துார சாலைகள் உள்ளன.
இதுதவிர, 1,292 கி.மீ., ஒன்றிய சாலைகள், 1,694 கி.மீ., துாரம் ஊராட்சி சாலைகள் என, மொத்தம் 5,239 கி.மீ., துார சாலை வகைபாடுகள் உள்ளன.
காஞ்சிபுரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய உதவிக் கோட்டங்கள் உள்ளடக்கிய நெடுஞ்சாலைத் துறை கோட்ட அலுவலகம், காஞ்சிபுரம் கலெக்ரேட் பின்புற பகுதியில் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தின் கட்டுப்பாட்டில், 1,122 கி.மீ., துார சாலைகள் உள்ளன.
எண்ணிக்கை
கிராமம் மற்றும் நகர சாலைகளில், வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் நெரிசலை குறைக்கும் பொருட்டு, சாலை விரிவாக்கப் பணிகள் நடந்து வருகின்றன.
உதாரணமாக, ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டம், முதல்வர் சாலை மேம்பாட்டு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின்கீழ், சாலை விரிவு மற்றும் புதுப்பிக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
ஒருங்கிணைந்த சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில், 56.45 கோடி ரூபாய் மதிப்பில், 55 கி.மீ., துாரத்திற்கு, 25 சாலைகள் போடப்பட உள்ளன.
அதேபோல, உங்கள் தொகுதியில் முதல்வரின் மேம்பாட்டு திட்டத்தில், நெய்யாடுபாக்கம் - இளையனார்வேலுார் இடையே, 30 கோடி ரூபாய் மதிப்பில் பாலம் கட்டப்பட உள்ளது.
இதையடுத்து, முதல்வரின் சாலை மேம்பாட்டு திட்டத்தில், கீழம்பி - செவிலிமேடு பாலாறு பாலம் வரையில், 8.10 கி.மீ., துாரம் இருவழிச் சாலையில் இருந்து, நான்குவழிச் சாலையாக விரிவுபடுத்தும் பணிக்கு, 56.50 கோடி ரூபாய்.
மேலும் புக்கத்துறை - உத்திரமேரூர் இருவழிச் சாலையில், பள்ளியகரம் முதல், நெல்வாய் மங்கலம் வரையில், 3.50 கி.மீ., துார இருவழி சாலையில் இருந்து நான்குவழிச் சாலையாக விரிவுபடுத்துவதற்கு, 22.75 கோடி ரூபாய் என, மொத்தம், 79.25 கோடி ரூபாய் மதிப்பில் இரண்டு இருவழிச் சாலைகள், நான்குவழிச் சாலைகளாக விரிவுபடுத்தப்பட உள்ளன.
அதேபோல, செங்கல்பட்டு மாவட்டத்திலும், முதல்வர் சாலைகள் மேம்பாட்டு திட்டத்திற்கு ஒரு பணி தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
ஒதுக்கீடு
டெண்டருக்கு பிறகே நிதி ஒதுக்கீடு மற்றும் எந்த சாலை என்கிற விபரம் தெரிய வரும் என, அக்கோட்டத்தைச் சேர்ந்த நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த சாலை விரிவுபடுத்துவதன் வாயிலாக கிராமங்களில் வாகனப் போக்குவரத்து நெரிசல் இன்றி, எளிதான போக்குவரத்திற்கு வழி வகை செய்யப்படும் என, நெடுஞ்சாலைத் துறையினர் தெரிவித்தனர்.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
முதல்வர் சாலை மேம்பாடு திட்டத்திற்கு, 79.25 கோடி ரூபாய் நிதியை, காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
இந்த நிதியை, காஞ்சிபுரம், உத்திரமேரூர் ஆகிய உதவிக் கோட்டங்களில் இருக்கும் இரண்டு இருவழிச் சாலைகள், நான்குவழிச் சாலைகளாக விரிவுபடுத்தும் பணிக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
இந்த, சாலை விரிவுபடுத்தும் பணிகளுக்கு, டெண்டர் விடவில்லை. அதன் பிறகே, இருவழிச் சாலை நான்குவழிச் சாலைகளாக போடும் பணிகள் துவக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.