/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பயணியர் நிழற்குடையில் மாற்றப்பட்ட இருக்கைகள்
/
பயணியர் நிழற்குடையில் மாற்றப்பட்ட இருக்கைகள்
ADDED : நவ 13, 2025 11:52 PM

காஞ்சிபுரம்: நம் நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை பேருந்து நிறுத்த பயணியர் நிழற்குடையில் சேதமான இரும்பு இருக்கைகள் அகற்றப்பட்டு, புதிதாக கிரானைட் கற்களால் செய்யப்பட்ட இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.
காஞ்சிபுரம் ரயில்வே சாலை, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தில், காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., எழிலரசன், 2018 - 19ம் ஆண்டில் ஒதுக்கிய நிதியில் இருந்து பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டது.
வெளியூரில் இருந்து அரசு மருத்துவமனைக்கு வருவோர் மற்றும் சுற்றியுள்ள பகுதியில் வசிப்போரும் பயணியர் நிழற்குடையை பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில், நிழற்குடையில் அமைக்கப்பட்டிருந்த இரும்பு இருக்கைகள் உடைந்து இருந்தன. இதனால், பயணியர் இருக்கையில் அமரமுடியாத சூழல் உள்ளது. எனவே, உடைந்த நிலையில் உள்ள இருக்கையை சீரமைக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் வலியுறுத்தி வந்தனர்.
இதுகுறித்த செய்தி நம் நாளிதழில் வெளியானதையடுத்து, மாநகராட்சி நிர்வாகம் சார்பில், பயணியர் நிழற்குடையில் உடைந்த நிலையில் இருந்த இரும்பு இருக்கைகள் அகற்றப்பட்டு, கிரானைட் கற்களால் செய்யப்பட்ட புதிய இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

